மார்ச் 12ம் தேதி நடைபெறுவதாக இருந்த நீட் முதுநிலை தேர்வை மத்திய சுகாதாரத்துறை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.
அனைத்து மருத்துவ படிப்புகளில் சேர அகில இந்திய அளவில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நீட் தேர்வை அறிமுகப்படுத்தியது. நீட் தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில் மாணவர்களின் தற்கொலை சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. இந்த நிலையில் நீட் தேர்வு கிராமப்புற, மற்றும் ஏழை மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று இதற்கு தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
மேலும் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதே அனைத்து கட்சிகளின் நிலைப்பாடாக உள்ளது. நீட் தேர்வுக்கு விலக்களிக்க வேண்டும் என தமிழக அரசும், அனைத்துக் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தின.
தொடர்ந்து திமுக அரசு ஆட்சி அமைத்தவுடன் நீட் பாதிப்பு குறித்து ஆராய ஏகே ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு நீட் பாதிப்பு குறித்த தனது அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.
இதனை அடிப்படையாக கொண்டு தமிழக அரசு நீட் எதிர்ப்பு மசோதாவை தயார் செய்து நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால் தமிழக ஆளுநர் நீட் விலக்கு மசோதாவை நேற்று திருப்பி அனுப்பினார்.
இந்நிலையில், முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மார்ச் 12-ம் தேதி நடைபெறுவதாக இருந்த முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு 6 முதல் 8 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.