ITamilTv

ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 8 பயணிகள் பலியான சோகம்!

Spread the love

நேபாளத்தின் காத்மண்டு நகரில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பயணிகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேபாளத்தின் காத்மண்டு நகரில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள பெனி-ஹில்லி மாவட்டத்தில் உள்ள பகுதியை நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது அந்த பேருந்து காத்மண்டுவில் இருந்து 60 கி.மீ. தொலைவில் தடிங் மாவட்டத்தில் கஜுரி பகுதியருகே சென்றபோது எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகேயுள்ள திரிசூலி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தின் ஒரு பகுதி முழுவதும் நீருக்குள் மூழ்கியது. இந்த விபத்தில் சிக்கி பயணிகள் 8 பேர் உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ பகுதிக்கு விரைந்து சென்ற மீட்பு குழுவினர் மற்றும் உள்ளூர்வாசிகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

காயமடைந்த பயணிகள் மீட்கப்பட்டு அருகில் உள்ள கஜூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மாவட்ட காவல்துறை அலுவலகம், தாடிங் கண்காணிப்பாளர் கவுதம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 2 பேர் பெண்கள் மற்றும் 6 பேர் ஆண்கள் என தெரியவந்துள்ளது. மேலும், தற்போது அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேபாளத்தில் பருவமழையின் போது இடைவிடாது பெய்த மழையின் காரணமாக ஆற்றில் வெள்ளம் ஏற்பட்ட நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.


Spread the love
Exit mobile version