கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் விவகாரத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீதும் திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் திமுக எம்.எல்.ஏ. உதயசூரியன் குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிப்பதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயம் அருந்தி இதுவரை 58 பேர் உயிரிழந்ததோடு 200-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரத்திற்கு தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு பாஜக தொடர் எதிர்வினையாற்றி வரும் நிலையில் இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பாஜக மூத்த நிர்வாகிகள், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக புகார் மனுவை அளித்தனர்.
இந்த புகார் மனுவில், கடந்த ஆண்டு விழுப்புரத்தில் நடந்த கள்ளச்சாராய மரணங்களில் காரணமான குற்றவாளிக்கும் அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கும் உள்ள தொடர்பை பாஜக ஆதரங்களுடன் கூறியும் அமைச்சர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும்,
திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் மாவட்ட ஆட்சியர் உடன் அமர்ந்து கொண்டு முதல் மூன்று மரணங்கள் கள்ளச்சாரயத்தால் நிகழவில்லை எனக் கூறிய போதும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்த அரசு அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குறிப்பாக, சங்கராபுரம் திமுக எம்.எல்.ஏ. உதயசூரியன் குற்றவாளிகளை காப்பாற்ற முயல்வதாக தெரிவதாக கூறி உள்ளார்.
மேலும், இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் முத்துசாமி பதவி விலக வேண்டும் எனவும் அதனோடு, இந்த வழக்கை மாநில அரசின் கீழ் உள்ள சிபிசிஐடி விசாரித்தால் உரிய முறையில் விசாரணை நடக்காது என்பதால் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.
இதனையடுத்து, ஆளுநர் மற்றும் பாஜக தலைவர்கள் இடையே சுமார் ஒரு மணி நேரம் நடைப்பெற்ற சந்திப்பிற்கு பின்னர் ஆளுநர் மாளிகை நுழைவுவாயிலில், பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,” தமிழக ஆளுநர் அவர்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் சந்தித்து சில கோரிக்கைகளை முன் வைத்தோம்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் மக்கள் உயிரிழந்திருப்பதையும், நூற்றுக்கணக்கானோர் பாதிப்படைந்துள்ளதையும் தமிழக அரசு முறையாக கையாளவில்லை.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விவகாரத்தில் திமுகவைச் சேர்ந்தவர்களே ஈடுபட்டிருக்கிறார்கள். திமுக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அதில், எங்களுக்கு நம்பிக்கை இல்லை.
மாநில அரசை கடந்து சிபிசிஐடி எதனையும் கண்டறிய முடியாது. எனவே சிபிஐ விசாரணை வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.
கள்ளக்குறிச்சியில் சிகிச்சை பெற்று வருபவர்கள் பலர் கண் பார்வை இழந்திருக்கிறார்கள் பலபேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். கள்ளச்சாராயபாதிப்பு குறித்து புதன்கிழமை தான் கண்டுபிடித்ததாக முதலில் கூறினர்.
ஆனால் செவ்வாய்க்கிழமை அன்றே பலபேர் மருத்துவமனைக்கு வந்துள்ளார்கள். அதனை மாவட்ட தலைமை கண்டுபிடிக்காமல் விட்டுள்ளது.. மாவட்ட நிர்வாகம் கண்டறிய தவறி உள்ளது.
இதனை மாவட ஆட்சியர் உடன் அமர்ந்து திமுக எம்.எல்.ஏ.-வும் மறைக்க முயன்றுள்ளார். மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுத்த அரசு திமுக எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மக்கள் பாதிக்கப்பட்டாலும் அரசியல் ரீதியாகவே நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் துறை அமைச்சரும், முதலமைச்சரும் சென்று பார்க்கவில்லை என்பது தமிழக அரசு எந்த அளவிற்கு மக்களை மதிக்கின்றது என்பதை எடுத்துக்காட்டி உள்ளது.
ஜனநாயக நாட்டில் மாநிலப் பிரச்சினைகளை கண்டிக்க அரசியல் கட்சிகளுக்கு உரிமை உள்ளது. பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் போதும், அவர்களின் போராடுவருவதற்கு முன்னரும் பலர் கைது செய்யப்பட்டார்கள்.
மேலும் பெண்கள் சிலர் மோசமாக நடத்தப்பட்டுள்ளார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அரசியல் தலைவர்களாக பார்க்காமல் குற்றவாளியாக நடத்தியுள்ளனர். ஆளுநரிடம் இதுகுறித்து முறையிட்டுள்ளோம்.
வழியில் பயமில்லை மடியில் கனமில்லை என்றால் சிபிஐ-க்கு அனுமதிக்க வேண்டியது தானே. திமுக அரசு குற்றவாளிகளை பாதுகாக்கிறது குற்றங்களை மறைக்க பார்க்கிறது. திமுக உடன் தொடர்புடையவர்கள் குற்றவாளிகளாக இருப்பதால் சிபிஐ விசாரணை வேண்டாம் என்று கூறுகிறார்கள்.
குற்றவாளிகளை திமுகவினர் பாதுகாக்க முயல்வதால் சிபிஐகோரிக்கை வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம். சிபிஐ விசாரணை என்பது பொதுமக்களின் கோரிக்கை. துறை அமைச்சர் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.
கள்ளக்குறிச்சியில் ஒரு நியாயம் கிடைக்காதா என்பதுதான் இப்பொழுது முக்கியமான ஒன்றாக உள்ளது. கள்ளக்குறிச்சிக்கு நியாயம் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார்.