எண்ணூர் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான இழப்பீட்டை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று பசுமைத் தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை எண்ணூரில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களை சந்தித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மனைவியும் பசுமைத் தாயகம் தலைவருமான சவுமியா அன்புமணி நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
எண்ணூர் எண்ணெய் கசிவு தமிழகத்தின் கடைசி நிகழ்வாக இருக்க வேண்டும். தற்போது அரசு அறிவித்துள்ள இழப்பீடுகள் மிகமிகக் குறைவு. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முழுமையான இழப்பீட்டை அளிக்க வேண்டும். எண்ணூரில்உடல்நல பாதிப்புகள் தொடர்பான பரிசோதனைகளை அனைத்து பகுதிகளிலும் நடத்தி உயர் சிகிச்சை அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சூழலமைப்பை மறுசீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
காலநிலை மாற்றம் இனிவரும் ஆண்டுகளில் பேரிடர்களை அதிகமாக்கும் என்பது அறிவியல் உண்மை. எனவே, தமிழக அரசு இனியும் தாமதிக்காமல், தமிழகத்தின் பாதுகாப்பு அரணாக விளங்கும் சோழமண்டல கடற்கரையை முழுமையாக பாதுகாக்கும் நடவடிக்கைகளை போர்க்கால வேகத்தில் எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.