ITamilTv

“பாசிசத்தை வீழ்த்திட வேண்டும்”* – ஸ்டாலினின் அந்த கடிதம் யாருக்கு தெரியுமா?

mk Stalin letter

Spread the love

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நாளை (20.03.2024) வேட்புமனு தாக்கல் துவங்க இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் பலவும் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி எண்ணிக்கை, தொகுதி உடன்பாடு போன்றவற்றை இறுதி செய்வதில் மும்முரம் காட்டி வருகின்றன. திமுகவை தவிர மற்ற பெரிய அரசியல் கட்சிகளான அதிமுக, பாஜக ஆகியவை இன்னும் இழுபறியிலேயே இருக்கின்றன.

இதில், நாம் தமிழர் கட்சிக்கு அவர்களின் விருப்ப சின்னமான கரும்பு விவசாயி சின்னமானது இந்த முறை வேறொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையிலும், “சின்னமா முக்கியம்; உங்களின் எண்ணமே முக்கியம்” என்ற பாணியில் தனித்து நின்று பிரச்சாரத்தையே துவக்கி விட்டது. திமுகவை பொறுத்த வரை, அதன் தோழமைக் கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்டுகள், கொமதேக மற்றும் முஸ்லீம் லீக் ஆகியவற்றுடன் தனது தொகுதிப் பங்கீட்டை முடித்து விட்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு தயாராகி வருகிறது.

mk Stalin letter

இந்நிலையில், திமுகவுடன் துவக்கம் முதல் தோழமை கட்சிகளாக இருந்து மீண்டும் கூட்டணியில் இணைந்துள்ள பல கட்சிகளுக்கும் ‘தாங்கள் கேட்ட தொகுதிகளும், எண்ணிக்கையும் கிடைக்கவில்லை’ என்ற வருத்தம் தொடர்வதாக கூறப்படுகிறது. அதே போல, தொகுதியே ஒதுக்கப்படாத கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உட்பட சில கட்சிகள் தங்களுக்கு எந்த தொகுதியும் ஒதுக்கப்படாத வருத்தத்திலும் உள்ளன.

இந்நிலையில்தான் அந்த கட்சிகள் அனைத்தையும் சமாதானப் படுத்தும் நோக்கோடு இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின். அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், “இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மையைக் காக்கவும், மதவெறி சக்திகளை வீழ்த்தி மதநல்லிணக்கம் தழைக்கவும், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ஜனநாயகத்தை மீட்கவும் ‘இந்தியா’ கூட்டணியை 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்கிற ஒரே இலக்குடன் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து நிற்கும் தோழமைக் கட்சியினர் அனைவரையும் வரவேற்கிறேன்.

இதையும் படிங்க: MKStalin | பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் கடிதம்..!!ஏன்?

தொடர் வெற்றி

     கடந்த 10 ஆண்டுகாலமாக இந்திய ஒன்றியத்தை ஆட்சி செய்த பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத – மாநில உரிமைகளைப் பறித்த ஆட்சியை விரட்டிட, 2024 நாடாளுமன்றத் தேர்தல் களமே சரியான வாய்ப்பாகும் என்கிற உறுதியான நம்பிக்கையுடன் இந்தியா கூட்டணியில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத் தோள் கொடுக்கும் தோழமைக் கட்சிகளுடன் களத்தைச் சந்திக்கிறோம்.

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே தோழமைக் கட்சியினருடன் ஏற்பட்ட கொள்கை உறவு, தேர்தல் கூட்டணியாக இணைந்து 2019 நாடாளுமன்றத் தேர்தல் களம், 2021 சட்டமன்றத் தேர்தல் களம், ஊரக உள்ளாட்சித் தேர்தல் களம், மாநகராட்சி, நகராட்சி தேர்தல் களம் என அனைத்திலும் தொடர் வெற்றியைப் பெற்று வருகிறோம்

ஐந்தாவது முறையாகத் தொடரும் இந்த கொள்கை அடிப்படையிலான வெற்றிக் கூட்டணியை அமைத்துள்ள தோழமைக் கட்சியினருக்கு உரிய வகையில் இடங்களை ஒதுக்கி, தொகுதிப் பங்கீடுகளைச் செய்யும் ஜனநாயகப்பூர்வமான நடைமுறையை
திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது.


“பாசிசத்தை வீழ்த்திட வேண்டும்”

“பாசிசத்தை வீழ்த்திட வேண்டும்” என்கிற ஒற்றை இலக்குடனான இந்தப் பயணத்தில், ஒரு சில ஜனநாயக இயக்கங்களுக்குத் தொகுதி ஒதுக்க இயலாத சூழல் ஏற்பட்டிருப்பது உண்மையில் எனக்கும் வருத்தத்தைத் தருகிறது. தொகுதிகளின் மொத்த எண்ணிக்கையையும் கூட்டணியின் வலிமையையும் கருத்தில் கொண்டு, இதுகுறித்து அனைத்துத் தோழமை இயக்கங்களிடமும் என் சார்பிலும் கழகத்தின் சார்பிலும் விளக்கப்பட்டுள்ளது.

     நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் யாரை வீழ்த்த வேண்டும், அதற்கு எந்த வகையில் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதைத் தொகுதிப் பங்கீட்டில் வாய்ப்பு பெறாத தோழமைக் கட்சியினரும் உணர்ந்து, உளப்பூர்வமான ஆதரவை நல்கி, தேர்தல் பணியாற்ற முடிவெடுத்திருப்பது ஆக்கப்பூர்வமான ஜனநாயகப் பண்பை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மனிதநேய மக்கள் கட்சிக்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இடம் ஒதுக்க இயலாமல் போன நிலையிலும், மதவெறி பாசிசத்தை வீழ்த்திடத் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்குப் பக்கபலமாக இருப்போம் என அக்கட்சிகளின் நிர்வாகிகள் முடிவெடுத்து ஆதரவைத் தெரிவித்திருப்பதை வரவேற்கிறேன். மனதார நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

“ஒன்றுபட்டு நிற்போம்! வென்றுகாட்டியே தீருவோம்”

அதுபோலவே, இந்தியா கூட்டணி வெற்றி பெறக் களப்பணியாற்ற முன்வந்துள்ள அனைத்து ஜனநாயக இயக்கங்களுக்கும், நேரில் வந்து ஆதரவு தெரிவித்து வரும் அமைப்பினருக்கும் நன்றியினை உரித்தாக்குவதோடு, 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில், “நாற்பதும் நமதே! நாடும் நமதே!” என்கிற வகையில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி அடைந்திடவும், இந்திய ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிடவும் தங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன். ஒன்றுபட்டு நிற்போம்! வென்றுகாட்டியே தீருவோம்” என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் மு.க.ஸ்டாலின்.

திமுக தேர்தல் பிரச்சாரம்

     இம்மாதம் 22ஆம் தேதி திருச்சியில் திருச்சி சிறுகனூரில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று இந்த பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை துவங்கும் ஸ்டாலின்,  மார்ச் 23ஆம் தேதி சொந்த ஊரான திருவாரூரில் நடை பெறும் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து  39 தொகுதிகளுக்கும் செல்ல திட்டமிட்டுள்ள முதலமைச்சர், 15 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக, இரண்டு, மூன்று தொகுதிகளுக்கு பொதுவான 15 இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களிலும் அவர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Spread the love
Exit mobile version