புத்தகப் பைகள் இல்லாத தினம் என்ற அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 6-8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பிப்ரவரி 26-ஆம் தேதி புத்தகம் இல்லாத தினம் கடைபிடிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை நேற்று அறிவித்திருந்தது.
இந்த நாளில் பள்ளிகளுக்கு புத்தகங்கள் எடுத்துச் செல்வதை விடுத்து. அனுபவங்கள் மூலம் வாழ்க்கைக் கல்வி கற்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் மாணவர்களிடையே மன அழுத்தத்தை போக்கவும் வாழ்வியலை மேம்படுத்தும் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் பிப்ரவரி 26-ஆம் தேதி முதல் புத்தக பைகள் இல்லா தினம் செயல்பாட்டிற்கு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.
ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் இந்த தினத்தில் மாடி தோட்டம், மூலிகை தாவர வளர்ப்பு, பாரம்பரிய கலைகள் குறித்து புத்தகமில்லா தினத்தில் பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், இத்திட்டத்தை செயல்படுத்த 1.26கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.
இந்நிலையில் புத்தகப் பைகள் இல்லாத தினம் என்ற அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்களிடையே கற்றல் திறனை மேம்படுத்த வேண்டி இருப்பதால் இந்த திட்டம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தற்போது அறிவித்துள்ளது. அறிவிக்கப்பட்ட வேகத்திலேயே இந்த திட்டம் திரும்ப பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.