நாம் தமிழர் கட்சியின் தேர்தல் செயல்திட்ட அறிக்கையை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டார். சென்னை கிண்டியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை
இந்த அறிக்கையில், நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைந்தால், மக்களின் நலனையே முதன்மையாகக் கொண்டு ஒரு வலுவான ஆட்சி நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மக்களின் ஒவ்வொரு கருத்தையும் வைத்து அரசு இயங்க முடியாது; ஆனால் மக்களின் நலனுக்காக மட்டுமே செயல்பட வேண்டும் என்பதே அவர்களின் நிலைப்பாடு.
தமிழகத்தில் அவர்கள் ஆட்சி வந்தால், 5 தலைநகரங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளனர். அதன்படி, மதுரை மொழி, கலை மற்றும் பண்பாட்டுத் தலைநகராகவும், சென்னை தொழில்நுட்பத் தலைநகராகவும், கோவை தொழில் தலைநகராகவும், கன்னியாகுமரி தமிழர் மெய்யியல் தலைநகராகவும், திருச்சி நிர்வாகத் தலைநகராகவும் மாற்றப்படும். மேலும், தலைமைச் செயலகமும் சட்டப்பேரவையும் திருச்சிக்கு மாற்றப்படும். அனைவருக்கும் அரசு வேலை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சான்றிதழ் இருந்தால் மட்டுமே அரசு சலுகைகள்
1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிற்சி முறை கல்வி வழங்கப்படும். பல கோடி பனை மரங்கள் நடும் திட்டம் செயல்படுத்தப்படும். குடிநீரை விற்பனை செய்வதைத் தடை செய்யப்படும். கடலில் வீணாக கலக்கும் மழைநீரைத் தடுக்கும் திட்டங்களும் மேற்கொள்ளப்படும்.
எவரும் படிக்காமல் இருக்காத நிலையை உருவாக்குவோம் என்றும், மாநில அரசுக்கு அதிக அதிகாரங்கள் கிடைக்க சட்ட மாற்றங்கள் செய்ய முயற்சி செய்வோம் என்றும் தெரிவித்துள்ளனர். மாநிலத்தில் வசூலிக்கப்படும் வரிகளில் 75% மாநிலத்திற்கும், 25% மத்திய அரசிற்கும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும்.
பெண்களுக்கு தனித் தொகுதிகள் வழங்கப்படும்
வாக்குப்பதிவு கட்டாயமாக்கப்படும். 100% வாக்களித்ததற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே அரசு சலுகைகள் வழங்கப்படும். மின்னணு வாக்கு இயந்திரங்களுக்கு பதிலாக மீண்டும் வாக்குச் சீட்டு முறை கொண்டு வரப்படும். 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரு நாடாளுமன்ற தொகுதி அமைக்கப்படும்.
சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் பெண்களுக்கு தனித் தொகுதிகள் வழங்கப்படும். விளையாட்டுத் துறையில் பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்கப்படும். பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனையாக மரண தண்டனை வழங்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்காக தனி அமைச்சகம் அமைக்கப்பட்டு, உள்ளாட்சியில் 5% இடஒதுக்கீடும் வழங்கப்படும்.

