ITamilTv

“அவங்க போட்ட உயிர் பிச்சையால் வாழ முடியாது” – ஆடியோ வெளியிட்டு மாணவன் தற்கொலை..!

Spread the love

சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போட்ட உயிர் பிச்சையால் என்னால் வாழ முடியாது என மாநில கல்லூரியில் பயிலும் மாணவன் பெங்களூருவிலிருந்து வந்த டபுள் டக்கர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளும் முன் பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த குருவராஜப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன். கூலித் தொழிலாளியான இவரது மகன் குமார் சென்னை மாநிலக்கல்லூரியில் (பிரசிடென்சி கல்லூரி) பி.ஏ. வரலாறு முதலாமாண்டு பயின்று வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலை புறநகர் ரயிலில் சக நண்பர்களுடன் வந்துள்ளார். திருநின்றவூர் ரயில் நிலையம் வந்த போது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் குமாரை ரயிலில் இருந்து இறக்கி அழைத்துச் சென்றுள்ளனர்.

அதனால் அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் செய்வதறியாது தவித்துள்ளனர். இந்நிலையில் இரவு நேரத்தில் தன்னுடன் பயிலும் சக மாணவர்களுக்கு ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் பச்சையப்பாஸ் மாணவர்கள் போட்ட உயிர் பிச்சையால் என்னால் வாழ முடியாது என நண்பர்களே தப்பா நினைக்காதீங்க, அப்பா அம்மாவும் என்னை தப்பா நினைக்காதீங்க .. அவங்க போட்ட பிச்சையால் நான் வாழ முடியாது என உருக்கமாக பேசி இருந்தது உள்ளார்.

அந்த ஆடியாவை கேட்ட மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து குமாரின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதனையடுத்து குமாரின் கல்லூரி அடையாள அட்டையை வைத்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது உறுதியானது.

தனது வாட்சப் ஸ்டேட்டஸ் பகுதியில் இறுதியாகத் தனது தாயுடனான புகைப்படத்தைப் பதிவு செய்துள்ள அவர், ‘ஸாரி அம்மா’ என அவரிடம் தான் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதனையடுத்து உடலைக் கைப்பற்றிய ரயில்வே காவல் துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் குமாருடன் பயின்று வரும் மாநிலக்கல்லூரியில் பயிலும் சக மாணவர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். மாநிலக் கல்லூரி மாணவனின் மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பாக காணப்படுகிறது.

மாநில கல்லூரி மாணவர்களுக்கும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்குமிடையே கடந்த பல ஆண்டுகளாகவே கெத்து காட்டுவதில் தகராறு ஏற்படுவதுண்டு. கத்தி குத்து, அரிவாள் வெட்டு என ஆண்டு தோறும் ஏதாவது பெரிய பிரச்சினை இந்த புறநகர் ரயிலில் அறங்கேறி வருகிறது. இந்நிலையில் ஒரு மாணவன் தற்கொலை செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. கல்லூரி நிர்வாகமும், அரசாங்கமும் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.


Spread the love
Exit mobile version