சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவர் வெள்ளி மற்றும் சனி ஆகிய நாட்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, வெள்ளிக்கிழமை மாலை சென்னை வரவுள்ள அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரிக்கு பயணம் மேற்கொள்கிறார்.
புதுச்சேரியில் முக்கிய பகுதிகளான அஜந்தா சிக்னல், அண்ணா சாலை மற்றும் அண்ணா திடல் உள்ளிட்ட இடங்களில் ரோடு ஷோ நடத்தி, கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.
பின்னர் அவர் மீண்டும் சென்னை திரும்பி, கிண்டி பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்க உள்ளார். அங்கு, பாஜக மூத்த தலைவர்களுடன் தேர்தல் தொடர்பான ஆலோசனையும் நடைபெறலாம் என கூறப்படுகிறது.
அடுத்ததாக, சனிக்கிழமை கேரளாவுக்கு செல்லும் பிரதமர் அங்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். இந்த வருகையை முன்னிட்டு சென்னையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், கிண்டி, மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ட்ரோன் பறக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

