சாத்தான்குளம் தந்தை–மகன் உயிரிழப்பு வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 9 பேருக்கான தண்டனை விவரம் அறிவிப்பு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தண்டனை அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2020ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் விதிமுறைகள் மீறியதாக கூறி, ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அப்போது அவர்கள் தாக்கப்பட்டதாக கூறப்பட்டு, பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.
இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து, சம்பந்தப்பட்ட 9 காவல்துறையினரை கைது செய்தது. நீண்டகால விசாரணைக்குப் பிறகு, அவர்கள் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தண்டனை குறித்த இறுதி முடிவுக்கு முன், மத்திய மற்றும் மாநில அரசுகளின் அறிக்கைகள் அவசியம் என நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும், குற்றவாளிகளின் தனிப்பட்ட நிலை, குடும்ப சூழல் போன்ற விவரங்களும் பரிசீலிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி, அனைத்து விவரங்களையும் ஆராய்ந்து தண்டனை அறிவிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகக் கூறி, தீர்ப்பை ஏப்ரல் 6ஆம் தேதிக்கு மாற்றியுள்ளார்.
