ITamilTv

சீதாப்பழ மரத்திற்கு பின்னால் இப்படி ஒரு கதை இருக்கா? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!

சீதாப்பழம் மரம்

Spread the love

சீதாப்பழம் அனைவருக்கும் மிகவும் பிடித்த பழம். பழவகைகளில் சற்று வித்தியாசம் கொண்டு விளங்கும் இந்த சீதாப்பழம் தன்னுள் நிறைய மர்மங்களை கொண்டுள்ளது என்று கூறினால் அது மிகையாகாது. இதில் அதிக விதைகள் இருப்பதன் காரணமாக பலரும் உண்ண தயங்குகின்றனர். ஆனால் இதிலிருக்கும் சத்துக்கள் எண்ணற்றவை என்பது தெரிந்தால் எல்லோருக்குமே இதை வளர்க்க வேண்டும் என்கிற ஆசையே வந்துவிடும். அந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்த இந்த சீதா மரத்திற்கு பின்னால் இருக்கும் கதை என்ன? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

சீதாப்பழத்திற்கு ஏன் சீதாப்பழம் என்று பெயர் வந்தது தெரியுமா? ராமாயணத்தில் வரும் சீதைக்கும், சீதா பழத்திற்கும் என்ன சம்பந்தம் தெரியுமா? உண்மையில் ராமாயணத்து சீதைக்கும் இந்த சீதாப்பழம் மரத்திற்கும் சம்பந்தம் உண்டு என்பது புராணத்தின் வாயிலாக தெரிகிறது.

ராமாயணத்தில் ராமர் வனவாசத்தில் இருந்த பொழுது சீதையை, லட்சுமணன் இடத்தில் பார்த்து கொள்ளுமாறு கூறிவிட்டு ஸ்ரீராமர் விறகு எடுத்து வர சென்றாராம். வெகு நேரமாகியும் ராமர் வராததால், லக்ஷ்மணன் சீதையை பத்திரமாக இருக்கும் படி கூறிவிட்டு ராமரை தேடிப் புறப்பட்டார். வெளியில் சென்ற இருவரும் திரும்பி வர தாமதமாகவே சீதைக்கு மனதில் பயம் ஏற்பட்டதாம். அந்த பயத்திலேயே அழுது கொண்டே அவர்களை தேடி காட்டுப்பாதை வழியே வந்து கொண்டிருந்தார்.

வழியெங்கும் அவர் விட்ட கண்ணீர் துளிகள் ஆங்காங்கே கீழே சிந்தியதாம். இறுதியில் ராமரை கண்ட சீதை மனமகிழ்ந்து ஆரத்தழுவி கொண்டாராம். அச்சமயத்தில் லக்ஷ்மணனும் வரவே மூவரும் குடிலுக்கு புறப்பட்டனர். வெகு தூரம் நடந்து வந்த களைப்பில் சீதை இருந்ததால் ராமர் சீதையைத் தன் தோள் மீது தாங்கிக் கொண்டு நடந்து வந்தாராம். இதனால் ராமருக்கு உடல் முழுவதும் வியர்க்கவே அந்த வியர்வை துளிகள் வழி எங்கும் சிந்தியதாம்.

சீதையின் கண்ணீர் துளிகள் சிந்திய இடத்திலும், ராமரின் வியர்வைத் துளிகள் சிந்திய இடத்திலும் செடிகள் முளைத்து இருந்தது. இரண்டும் வெவ்வேறாக வனமெங்கும் வளர்ந்து விருட்சமாகி, காய்கள் காய்த்து பசுமையுடன் பூத்து நின்றதாம். இதை கண்ட ஸ்ரீ ராமர் ஒரு மரத்திற்கு சீதா என்றும், சீதா தேவி ஒரு மரத்திற்கு ராம் என்றும் பெயர் வைத்தனர். இப்படித் தான் இந்த சீதாப்பழ மரம் உருவானதாக கதைகள் கூறப்படுகிறது. அதனால் தான் பழ வகைகளில் சீதா மரம் தனித்துவமாக விளங்குகிறது.

இதையும் படிங்க: கருஞ்சீரகம் : அத்தனை நோய்களுக்கும் ஒரே மருந்து – அதிசய மருத்துவ குணங்கள்!

சீதாப்பழ மரம், ராம் பழமரம் என்று இரண்டு வகையாக உலகில் இருந்தாலும் சீதாப்பழ மரமே மிகவும் பிரசித்தி பெற்று விளங்கியது. சீதாப்பழத்தில் இருக்கும் இரும்புச்சத்து பெண்களுக்கு நிறைய நன்மைகளை செய்யக் கூடியது. பெண்கள் அடிக்கடி சீதாப்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் அதிகரிக்கும். இதில் அதிக கலோரிகள் இருப்பதால் உடலுக்கு ஊட்டச்சத்து கொடுக்கக்கூடியது. இதில் அடங்கியிருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது.

மேலும் இதிலிருக்கும் அதிகளவு நார்ச்சத்துக்கள் சர்க்கரையின் அளவை கூட்டாது என்பதால் தாராளமாக எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். மன அழுத்தம் குறைய வைட்டமின் சி நமது உடலுக்கு அதிகம் தேவைப்படும். நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும் பொழுது சீதாப்பழம் சாப்பிட்டால் அதிலிருந்து எளிதில் வெளிவர முடியும். ஜீரண சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டுள்ளதால் பித்தம், வாந்தி, பேதி, தலைசுற்றல் போன்றவற்றை குணப்படுத்த கூடிய அற்புத ஆற்றல் இந்தப் பழத்திற்கு உண்டு.

இன்றைய தலைமுறையினர் மது, புகை போன்றவற்றிற்கு அடிமையாக இருக்கின்றனர். வீட்டில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடக்கூடிய சூழ்நிலையில் இருக்கின்றனர். அதிக அளவில் டீ, காபி போன்றவை அருந்தும் பழக்கம் உடையவர்கள் வீட்டில் நிறைய இருப்பார்கள். இது போல் இருக்கும் சூழ்நிலையில் அவர்களுக்கு உண்டாகக்கூடிய உடல் பிரச்சனையை சரிசெய்ய பொட்டாசியம் நமது உடலுக்கு அதிகம் தேவைப்படும். தினமும் சீதா பழம் சாப்பிட்டால் மேற்கண்ட விஷயங்களினால் ஏற்படும் உடல் பாதிப்புகள் முழுமையாக நீங்கும்.


Spread the love
Exit mobile version