Tamilnadu

“பிச்சையெடுத்த தமிழ்நாடு!” டிஎன்பிஎஸ்சி தேர்வில் இப்படியா தப்பு பண்றது! விளாசிய அண்ணாமலை!

TNPSC annamalai

இந்த பணியிடங்களுக்கு 76 ஆயிரத்து 974 பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில் அவர்களுக்கான தாள்-1 தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் தமிழ் தகுதித்தாள் தேர்வு, பொதுப்பாடங்கள் மற்றும் திறனறிவுத் தேர்வு இடம்பெற்றது . இந்த தேர்வை 51 ஆயிரத்து 416 பேர் எழுதினர்.
இந்த நிலையில், இந்த தேர்வில் அய்யா வைகுண்டர் பற்றி கேள்வி தவறாக இடம்பெற்று இருப்பதாக தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தேர்வில் வெற்றி பெற்று, அரசுப் பணிக்குத் தேர்வாவது, பல லட்சம் இளைஞர்களின் கனவாக இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, TNPSC தேர்வுகளைக் குறித்த நேரத்தில் நடத்தாமலும், தேர்வு முடிவுகளை முறையாக வெளியிடாமலும், பல முறைகேடுகளாலும், குளறுபடிகளாலும், தமிழக இளைஞர்களின் அரசுப் பணி கனவு சிதைந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், இளநிலை உதவி வரைவாளர் பணிக்காக நடைபெற்ற TNPSC தேர்வில், அய்யா வைகுண்டர் குறித்த கேள்வியின் ஆங்கில மொழிபெயர்ப்பில், முடிசூடும் பெருமாள் என்ற பெயரை, “the god of hair cutting” என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

தமிழக அரசுப் பணிக்கான தேர்வில், பல கோடி மக்கள் வணங்கும் அய்யா வைகுண்டரின் மற்றொரு பெயரை, இத்தனை கவனக்குறைவாகவும், பொறுப்பின்றியும் மொழிபெயர்த்திருப்பது, கடுமையான கண்டனத்துக்குரியது.

அதோடு மட்டுமல்லாமல், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் சரியான கூற்றுகளை கண்டறியவும் என்ற மற்றொரு கேள்விக்கு, ‘2024 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்து விருதை பெற்றது’ என்பதை, “It Begged the United Nations award” – பிச்சை எடுத்தார்கள் என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

திமுக தலைவர்கள், பணம் கொடுத்து வாங்குவதை எல்லாம் விருதுகள் என்று பொய் கூறி ஏமாற்றி வருவதால், இந்தக் கேள்வியைத் தயாரித்தவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

அரசுப் பணி தேர்வுகளுக்கான கேள்விகளைத் தயார் செய்யும்போது, இது போன்று கவனக்குறைவாக இருப்பது, திமுக அரசு, தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை எத்தனை கிள்ளுக்கீரையாக நினைக்கிறது என்பதையே காட்டுகிறது.

எல்லா இளைஞர்களும், கோபாலபுரம் குடும்பத்தினரைப் போல, எந்தத் தகுதியும் இன்றி மேலே வர வேண்டும் என்று நினைப்பவர்கள் அல்ல. அரசுப் பணித் தேர்வுகளுக்காகக் கடுமையாக உழைக்கும் இளைஞர்களை அவமானப்படுத்தும் போக்கை, திமுக அரசு இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *