தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பிரதமர் மோடி நாளை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகிறார். அவர் நாகர்கோவிலில் ரோடு ஷோ நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தேர்தல் பரபரப்பு அதிகரித்துள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் பிரதமர் மோடி இந்த பயணத்தை மேற்கொள்கிறார்.
திட்டப்படி, அவர் நாளை பிற்பகல் 3.30 மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு, மாலை 4.10 மணிக்கு நாகர்கோவிலுக்கு வருகிறார்.
அதன்பின், 4.15 மணியளவில் ஹெலிபேட்டிலிருந்து காரில் வெப்பமூடு சந்திப்பிற்கு செல்லும் பிரதமர், மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை வெப்பமூடு முதல் வடசேரி வரை சுமார் 1.5 கிலோமீட்டர் தூரம் ரோடு ஷோ நடத்துகிறார்.
இந்த ரோடு ஷோவில், கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவர் மக்களிடம் வாக்குகள் கோருகிறார்.
நிகழ்ச்சி முடிந்ததும், மாலை 5.45 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து ஹெலிகாப்டரில் திருவனந்தபுரம் செல்கிறார். அங்கிருந்து மாலை 6.20 மணிக்கு டெல்லிக்குப் புறப்படுகிறார்.
