சிறு வணிகர்கள் பயன்படக்கூடிய வகையில் சமாதான திட்டம் அறிமுகம் செய்யப்படுவதாக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்த அறிவிப்பை சட்டப்பேரவையில் முன்மொழிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது :
சிறு வணிகர்கள் பயன்படக்கூடிய வகையில் சமாதான திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது . நிறைய வழக்குகள் நிலுவையில் உள்ளதால் வணிகவரித்துறையில் பணிச்சுமை அதிகரிக்கிறது. இதனால் வணிகர்களும் சிரமத்திற்கு உள்ளாக்கி வருகிறார்கள்.
அரசுக்கு வரவேண்டிய வருவாயும் வராமல் உள்ளது, நிலுவையில் உள்ள வரியை வழங்குவதற்கு அரசு சலுகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வணிகர்கள் முன் வைத்தனர். அதற்காக புதிய வடிவத்தில் சமாதான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
50,000க்கும் கீழ் வரி நிலுவை வைத்துள்ள சிறு, குறு வணிகர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும். 50,000 முதல் 10 லட்சம் வரை வரி நிலுவை வைத்துள்ள வணிகர்கள் 20% வரியை செலுத்தினால் போதும்.
வரி தள்ளுபடி செய்வதன் மூலம் 95,502 வணிகர்கள் பயன்பெறுவர்; தமிழ்நாடு வரலாற்றில் இத்தகைய சலுகை வழங்குவது இதுவே முதல்முறை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.