Tamilnadu

3வது குழந்தைக்கும் உரிமை.. – தமிழக அரசு வெளியிட்ட புதிய உத்தரவு!

தமிழ்நாடு அரசு பெண் ஊழியர்களுக்கு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதுவரை, அரசு பணியில் உள்ள பெண்களுக்கு முதல் இரண்டு குழந்தைகளுக்காக முழு ஊதியத்துடன் ஒரு ஆண்டு கால பேறுகால விடுப்பு வழங்கப்பட்டு வந்தது.

தமிழ்நாடு அரசு பேறுகால விடுப்பு

இந்த சலுகை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் நிலையில், தற்போது மூன்றாவது குழந்தைக்கும் பேறுகால விடுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக, முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தாலும், அடுத்த பிரசவத்திற்கும் அதேபோல் முழு ஊதியத்துடன் விடுப்பு வழங்கப்பட்டு வந்தது.

ஆனால், மூன்றாவது குழந்தைக்கு இதே சலுகை வழங்கப்பட வேண்டும் என பல பெண் ஊழியர்கள் கோரிக்கை வைத்தனர். இதைத் தொடர்ந்து, அவர்கள் நீதிமன்றத்தை அணுகியதும் முக்கிய திருப்பமாக அமைந்தது.

மூன்றாவது குழந்தை பேறுகால சலுகை

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஆதாரமாக கொண்டு முக்கிய உத்தரவை பிறப்பித்தது. அந்த தீர்ப்பில், குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஒரு வரம்பு விதிக்கக்கூடாது.

மூன்றாவது குழந்தைக்கு தேவையானால் குறைந்த கால அளவில் விடுப்பு வழங்கலாம் என்றும் கூறப்பட்டது.இதையடுத்து, தமிழக அரசு விதிகளில் மாற்றம் செய்து புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. அதன் படி, முதல் இரண்டு குழந்தைகளுக்கு முன்புபோல ஒரு ஆண்டு முழு ஊதியத்துடன் விடுப்பு கிடைக்கும்.

ஆனால், மூன்றாவது குழந்தைக்கு முழு ஊதியத்துடன் 12 வாரங்கள் பேறுகால விடுப்பு வழங்கப்படும் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பு அரசு பெண் ஊழியர்களுக்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் அளிப்பதாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *