ITamilTv

”மகளிர் இட ஒதுக்கீடு..” பிரதமர் மோடி அரசின் வரலாற்று சாதனை.. வானதி பெருமிதம்!!

Spread the love

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது இந்திய வரலாற்றில் பிரதமர் மோடி அரசின் வரலாற்று சாதனை என வானதி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதா, நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் மட்டும், அசாதுதின் ஓவைசி தலைமையிலான, அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சிடயின் இரண்டு எம்.பி.க்கள் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை எதிர்த்து வாக்களித்தனர்.

இது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் மற்றுமொரு மகத்தான சாதனை. வரலாற்று சீர்திருத்தம் என்றே குறிப்பிட வேண்டும். ஏனெனில் இப்படி அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன், ஒருமனதாக மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்ற முடியும் என்பதை யாரும் கற்பனையில் கூட நினைத்திருக்க மாட்டார்கள்.

அந்த அளவுக்கு மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற விடாமல் சில அரசியல் கட்சிகள் தடங்கல்களை ஏற்படுத்திக் கொண்டே இருந்தன. அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து, அரசியலில் மகளிருக்கு உரிமை என்ற அதி முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்த நடவடிக்கையை சாத்தியமாக்கியுள்ளார்.

இதனால், மக்கள் தொகையில் சரி பாதியாக உள்ள மகளிரின் மனங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளார் பாரதப் பிரதமர் மோடி. இதை பொறுத்துக் கொள்ள முடியாத காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், 2029-ம் ஆண்டில்தான் மகளிர் இட ஒதுக்கீடு அமலாகும் என்பதை குறைகூறி பேசி வருகின்றனர் என்று தெரிவித்தார்.

எந்தவொரு செயலையும் சரியான தருணத்தில் செய்தால் அது முழு பலனையும் கொடுக்கும். தேர்தல் ஆதாயத்திற்காக அவசர அவசரமாக செய்தால் மகளிருக்கு முழுமையான பலன்கள் கிடைக்காது என்பதால்தான், மகளிர் இட ஒதுக்கீட்டில் ஒவ்வொரு அடியையையும் பிரதமர் மோடி அரசு கவனமாக எடுத்து வைத்து வருகிறது.

ஏனெனில் 1996ல் தேவகவுடா பிரதமராக இருந்தபோதும், 1999, 2002, 2003ல் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதும், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டும் நிறைவேற்ற முடியவில்லை. 2010ல் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, மாநிலங்களவையில் மட்டும் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற முடிந்தது. பாஜக ஆதரவளித்ததால் இது சாத்தியமானது. இப்போது இண்டி கூட்டணியில் உள்ள லாலுபிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது இந்திய வரலாற்றில் சுதந்திர நாள், குடியரசு நாள் போல மிகமிக முக்கியமானது. ஏனெனில் மகளிருக்கு அரசியல் அதிகாரம் கிடைக்க, இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை, விடுதலைக்கு முன்பிருந்தே எழுந்தது. 1931-ல் சரோஜினி நாயுடு போன்ற பெண் தலைவர்கள், பெண்களுக்கு அரசியல் இட ஒதுக்கீடு வேண்டும் என்பதை வலியுறுத்தி அன்றைய இங்கிலாந்து பிரதமருக்கு கடிதம் எழுதினர்.

1950-ல் நமது அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டது. அப்போது அரசியல் நிர்ணய சபையில் நடந்த விவாதத்தில் மகளிருக்கான இடஒதுக்கீடு பிரச்சினையும் வந்தது. ஆனால், இது பற்றிய விவாதம் தேவையற்றது என்று தவிர்க்கப்பட்டது. விடுதலைக்கு பிந்தைய கடந்த 76 ஆண்டுகளில் மகளிர் இட ஒதுக்கீடு பற்றிய விவாதங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், பிரதமர் மோடி தான் அதனை சாத்தியமாக்கியிருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டத்தின்படி. நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கான தொகுதிகள் சுழற்சி முறையில் முடிவு செய்யப்படும். மூன்று பொதுத் தேர்தல்களுக்கு ஒருமுறை பெண்களுக்கான தொகுதிகள் மாற்றியமைக்கப்படும்.

1952ல் அமைந்த முதல் மக்களவையில் 24 பெண் எம்பிக்கள் மட்டுமே இருந்தனர். தற்போது 17-வது மக்களவையில் 14 சதவீதம் அதாவது 78 பெண் எம்பிக்கள் உள்ளனர். மாநிலங்களவையில் 5 சதவீதம் அதாவது 11 பெண் எம்பிக்கள் உள்ளனர். மக்களவையில் பெண் எம்பிக்களின் எண்ணிக்கை 14 சதவீதத்திற்கு மேல் சென்றதில்லை என தெரிவித்துள்ளார்.


Spread the love
Exit mobile version