தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று பெரிய கட்சியாக உருவானது. காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்ததால் பெரும்பான்மையுடன் அரசு அமைக்கப்பட்டது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் அர்லேகர், விஜய்க்கு முதலமைச்சர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அவருடன் மேலும் 9 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். முதல்வராக பொறுப்பேற்றவுடன் வீடுகளுக்கு இலவச 200 யூனிட் மின்சாரம், சிங்கப்பெண் அதிரடிப்படை அமைப்பு, போதைப்பொருள் ஒழிப்பு படை உருவாக்கம் போன்ற முக்கிய கோப்புகளில் விஜய் கையெழுத்திட்டார்.
பின்னர் அவர் தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு பெரியார் திடலுக்குச் சென்று பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
இதற்குப் பிறகு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ கருப்பையா தற்காலிக சபாநாயகராக பதவியேற்றார். இந்த நிகழ்ச்சியில் முதலில் வந்தே மாதரம், அதன் பின் தேசிய கீதம், பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது. இதற்கு சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
