நடிகர் Vijay நடித்துள்ள ‘Jananayagan’ திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியான சம்பவம் திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் முதலில் பொங்கலை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டிருந்தாலும், சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக வெளியீடு தள்ளிப்போயுள்ளது. தற்போது படத்தை விரைவில் திரையரங்குகளில் வெளியிட தயாரிப்புக் குழு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், தேர்தலுக்கு முன்பாக ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிந்தது ரசிகர்களுக்கும் படக்குழுவிற்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி இதுவரை 9 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பிரசாந்த், செல்வம் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், படத்தின் தயாரிப்பாளர் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, சென்சார் சான்றிதழ் பெறும் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இணையத்தில் கசிந்திருந்தாலும், திரையரங்குகளில் வெளியானால் இந்த படம் புதிய சாதனையை உருவாக்கும் என்ற நம்பிக்கை திரைத்துறையில் நிலவுகிறது.
