அதிமுகவைச் சேர்ந்த சி.வி. சண்முகம் மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை இடத்திற்கு ஜூன் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மயிலம் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெற்ற அவர், கடந்த மே 7 ஆம் தேதி தனது மாநிலங்களவை பதவியை விலக்கிக் கொண்டார்.
இதுபோல மகாராஷ்டிராவில் சுநேத்ரா பவாரும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததால், அந்த இடத்திற்கும் ஜூன் 18 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
மேலும், 10 மாநிலங்களைச் சேர்ந்த 24 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலமும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நிறைவடைகிறது. கர்நாடகாவில் மல்லிகார்ஜுன் கார்கே, தேவகவுடா மற்றும் மத்திய பிரதேசத்தில் திக்விஜய் சிங், ஜார்ஜ் குரியன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பதவிக்காலமும் முடிவடைகிறது.
இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 1 முதல் 8 ஆம் தேதி வரை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
