தவெக அரசுக்கு அதிமுக ஆதரவு அளித்தது பதவி ஆசைக்காக அல்ல என்றும், மக்கள் தீர்ப்பையும் திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டையும் மதித்தே அந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், அம்மா உணவகம், தாலிக்கு தங்கம், அம்மா மினி கிளினிக், அம்மா குடிநீர் உள்ளிட்ட திட்டங்கள் தொடர வேண்டும் என்பதற்காகவே பல கோரிக்கைகள் அரசிடம் வைக்கப்பட்டதாக கூறினார். மேலும், 7.5 சதவீத மருத்துவ உள் ஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்த வேண்டும், 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக மாற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டதாக தெரிவித்தார். அமைச்சரவை பதவியை அதிமுக ஒருபோதும் கோரவில்லை என்றும், இதுகுறித்து பலமுறை விளக்கம் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார். கட்சியை உடைக்க நினைத்ததே இல்லை என்றும், “இந்த கட்சிதான் எங்களுக்கு உயிர்” எனவும் வேலுமணி குறிப்பிட்டுள்ளார். மேலும், தொண்டர்களின் விருப்பத்தை மதித்து பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
