தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியும் திமுகவும் நேருக்கு நேர் மோதும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கோவையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பேசுவார் என்று கூறினார்.
மேலும், வரும் 19ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கிருத்திகா சிவக்குமாரை ஆதரித்து சிவகிரியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.
அதன்போது ரோடு ஷோவும் நடைபெறும் என கூறினார்.மக்களவையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மறு வரையறை திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதாகவும், இதனால் ஆண்களுக்கான இடங்கள் குறையாது என்றும் அவர் விளக்கினார்.
ஒவ்வொரு மாநிலத்திலும் 50 சதவீத அளவில் பிரதிநிதித்துவம் உயர்த்தப்படும் என்றும் கூறினார். இந்த திட்டத்திற்கு தமிழக முதல்வர் எதிர்ப்பு தெரிவிப்பதை அவர் விமர்சித்தார்.
கடந்த சில ஆண்டுகளில் மக்களுக்கான திட்டங்களை மாநில அரசு சரியாக செயல்படுத்தவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
மத்திய அரசுடன் இணைந்து செயல்படாமல் இருப்பதால் மாநிலத்திற்கு பல நன்மைகள் கிடைக்கவில்லை என்றார்.
மேலும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை முதல்வராக உயர்த்துவதே தற்போதைய அரசின் நோக்கம் என்றும் தெரிவித்தார். வரும் தேர்தலில் NDA மற்றும் திமுகவுக்கிடையே கடுமையான போட்டி இருக்கும் என அவர் கூறினார்.
