சென்னையில் பள்ளிகள் திறக்கும் நேரங்களில் மாணவர்கள் ஹெல்மெட் இல்லாமல் இருசக்கர வாகனங்களில் பள்ளிக்கு வருவது அதிகரித்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை கவலை தெரிவித்துள்ளது. குறைந்த வயதில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் மாணவர்கள் வாகனம் ஓட்டுவது சாலை பாதுகாப்புக்கு பெரும் ஆபத்தாக இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் முக்கிய சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், பள்ளிகளில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை அதிகரிக்கவும், மாணவர்கள் வாகனம் ஓட்டுவதை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் “சாலை பாதுகாப்பு மன்றம்” அமைக்கப்பட வேண்டும் என்றும், உடற்கல்வி ஆசிரியர்கள் இதனை முன்னெடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், காலை கூட்டங்களில் தலைக்கவசத்தின் அவசியம் மற்றும் சாலை விதிகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் பைக் அல்லது ஸ்கூட்டரில் பள்ளிக்கு வந்தால் அந்த வாகனங்களை பறிமுதல் செய்து, பெற்றோரை அழைத்து எச்சரித்த பிறகே ஒப்படைக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
