தமிழகத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், தோல்வி பயத்தால் 5 மாணவ, மாணவிகள் தற்கொலை (suicide) செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆவடியில் பாரதி நகரில் வசித்து வரும் கனகராஜ் என்பவரின் 17 வயது மகன் தேவா ஆவடி காமராஜர் நகரில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த நிலையில், நேற்று வெளியான பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவில், தமிழ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் ஆகிய 2 பாடங்களில் தோல்வி அடைந்ததால் விரக்தி அடைந்து தனது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை (suicide) செய்து கொண்டார்.
இதேபோல், சென்னை புதுவண்ணாரப்பேட்டை ஆவூர் முத்தையா தெருவில் வசித்து வரும் 17 வயதாகும் தாருண்யா என்ற தனியார் பள்ளி மாணவி பிளஸ்-2 தேர்வில் 2 பாடங்களில் தோல்வி அடைந்ததால் விரக்தி அடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே ஓமந்தூர் கிராமத்தில் வசித்து வரும் 19 வயதாகும் ரமணி என்ற மாணவி ஏற்கனவே கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் ஆங்கில பாடத்தில் தோல்வி அடைந்திருந்த நிலையில், இந்த ஆண்டு தனித்தேர்வராக எழுதியதில் மீண்டும் தோல்வி அடைந்ததால் விரக்தியில் மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வானூர் அருகே சேமமங்கலம் கிராமத்தில் வசித்து வரும் 18 வயதாகும் அருந்ததி என்ற மாணவி பிளஸ்-2 தேர்வில் 600-க்கு 500 மதிப்பெண்ணுக்கு மேல் வரும் என எதிர்பார்த்த நிலையில், 380 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி அடைந்ததனால் ஏமாற்றம் அடைந்த மாணவி, வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து, மாணவிக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை நாராயண குப்பம் கிராமத்தில் வசித்து வரும் 17 வயதாகும் ஹரி என்ற மாணவர் தேர்வு முடிவு வெளியாவதற்கு முன்பாகவே தேர்வு முடிவு குறித்த பயமும், கலக்கமும் ஏற்பட்டதால் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை, பட்டாளம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் 17 வயதாகும் சுபஸ்ரீ மகா பிரத்திநிஷா என்ற மாணவி பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த நிலையில், பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவில், 5 பாடங்களில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 5 மாணவ மாணவிகள் பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.