முதலமைச்சர் விஜய் வழங்கிய உத்தரவைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் முதல் கட்டமாக 50 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே இயங்கி வந்த மொத்தம் 717 டாஸ்மாக் கடைகளை மூட அரசு முன்பே அறிவித்திருந்தது. அதன் முதல் கட்ட நடவடிக்கையாக பல மாவட்டங்களில் கடைகள் மூடப்பட்டு வருகின்றன.
சென்னையில் வழிபாட்டு தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் இருந்த 10 டாஸ்மாக் கடைகள் முதலில் மூடப்பட்டன. அதேபோல் கோவை மாவட்டத்திலும் முதல் கட்டமாக 4 டாஸ்மாக் கடைகள் செயல்பாட்டில் இருந்து நிறுத்தப்பட்டன.
மேலும் நெல்லை, மதுரை, திருச்சி, நாகை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் ஒரே நாளில் கடைகள் மூடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கையை பொதுமக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர். சமூக நலனையும் பொது ஒழுங்கையும் கருத்தில் கொண்டு அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மீதமுள்ள இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளையும் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மக்கள் வாழும் பகுதிகளில் மதுக்கடைகள் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
