சென்னை கொரட்டூர் பகுதியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பில் அதிகாலை நில அதிர்வு ஏற்பட்டதால் அச்சமடைந்த குடியிருப்பு வாசிகள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
சென்னை கொரட்டூர் பகுதியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் அரசு அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. நகர் மேம்பாட்டு அறக்கட்டளை என்ற பெயரில் 1947ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கட்டடம் பின்னர், 1961இல் காங்கிரஸ் ஆட்சியின் போது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இதில் தமிழ்நாடு முழுக்க வீட்டு மனைகள், வீடுகளைக் கட்டி குறிப்பிட்ட விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும். அந்த குடியிருப்பில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் இன்று காலை இந்த குடியிருப்பில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது.
இதனால் அச்சமடைந்த 300க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள், தங்கள் குடும்பத்துடன் சாலையில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த திடீர் நில அதிர்வுக்கு என்ன காரணம் என்பது தெரியவில்லைஇந்த நிலஅதிர்வு காரணமாக கட்டிடத்தில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும் தெரியவில்லை.

கடந்த சில காலமாகவே தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் கட்டுப்படும் வீடுகள் தரமானதாக இல்லை என்ற புகார் எழுந்து வரும் நிலையில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட நில அதிர்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.