உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னையில் நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
நடப்பு உலக கோப்பையில் இங்கிலாந்தை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான் அணி தற்போது பாகிஸ்தானையும் வீழ்த்தி வரலாறு படைத்துள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுமட்டுமல்லாமல் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக பாகிஸ்தானை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி வெற்றி கண்டுள்ளது .மேலும் உலக கோப்பை புள்ளிப்பட்டியலிலும் 6வது இடத்திற்கு ஆப்கானிஸ்தான் அணி முன்னேறியது .
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்தது .
பாகிஸ்தான் தரப்பில் கேப்டன் பாபர் அஸம், 92 பந்துகளில் 74 ரன்கள் எடுத்திருந்தார். அப்துல்லா ஷஃபீக் 58 ரன்கள், ஷதாப் கான் மற்றும் இஃப்திகார் அஹமத் தலா 40 ரன்கள் எடுத்திருந்தனர். ஆப்கன் சார்பில் நூர் அகமது அதிகபட்சமாக 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.
இதையடுத்து 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்தது.
ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்களான ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஸத்ரானும் இணைந்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். அதிரடியாக ஆடிய ரஹ்மனுல்லா குர்பாஸ், 53 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க . பின்னர் ரஹ்மத் ஷாவுடன் ஜோடி சேர்ந்து இப்ராஹிம் ஸத்ரான்அதிரடியில் மிரட்டினார் .
சிறப்பாக விளையாடிய இப்ராஹிம் ஸத்ரான் 113 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுக்க . பின்னர் அந்த அணியின் கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாய்தி களம் கண்டார். ஹஷ்மதுல்லா ஷாய்தி மற்றும் ரஹ்மத் ஷா இணைந்து ஆட்டத்தை இறுதி வரை நகர்த்தி ஆப்கனுக்கு வெற்றியை தேடி தந்தனர்.
பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என மூன்றிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆப்கன் அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.