எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பேச வாய்ப்பளிக்கவில்லை எனக்கூறி சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டம் இன்று தொடக்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அப்போது எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பேச வாய்ப்பளிக்க வேண்டும் என பேரவையில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர் .
இருப்பினும் எடப்பாடி பழனிசாமிக்கு பேச வாய்ப்பளிக்காததால் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஈ.பி.எஸ் கூறியதாவது :
“பல இஸ்லாமிய அமைப்புகள் 36 இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய என்னிடம் கோரிக்கை வைத்தனர் அந்த அடிப்படையில் இன்று கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசினேன்
முதலமைச்சர் பதில் அளிக்கும்போது இதற்கான பதில் அளித்திருந்தால் எங்கள் தரப்பில் இருந்து எந்த பிரச்னையும் வந்திருக்காது.
இஸ்லாமியர்கள் மீது என்ன அக்கரை என கேட்டதோடு, அதிமுக அரசு இஸ்லாமியர்களுக்கு ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார் இதற்காகத் தான் எனக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டது, அதனால் தான் நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்.
சிறைவாசிகள் விடுதலை விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது . அதிமுக எப்போதும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருந்துள்ளது . சிறுபான்மையினர்கள் இன்று எங்களை சந்திப்பது திமுகவிற்கு கோபத்தை ஏற்படுத்துகிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.