டெல்லியில், பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் (executive committee) இரண்டு நாட்கள் நடைபெற உள்ள நிலையில், இந்த கூட்டம் இன்று தொடங்க உள்ளது.
இந்த தேசிய செயற்குழு கூட்டத்தில் (executive committee), அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா, உள்துறை மந்திரி அமித் ஷா உள்ளிட்ட மத்திய மந்திரிகள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல் மந்திரிகள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை கவுரவிக்கும் வகையில், கட்சியின் சார்பில் பேரணி நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும், இந்த பேரணி நாளை நடைபெற இருந்த நிலையில், இன்று மாற்றப்பட்டு நடைபெற உள்ளது.
மேலும், இந்தப் பேரணி இன்று மதியம் பட்டியல் சவுக் பகுதியில் இருந்து நாடாளுமன்ற சாலை வரை நடைபெற உள்ளது. இதனால், டெல்லியின் சில பகுதிகளில் வாகன போக்குவரத்து பாதிக்கப்படும் என்பதால், வாகனங்கள் செல்வதற்கான சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
மேலும், டெல்லியில் நடைபெற இருக்கும் இந்த பேரணியை முன்னிட்டு காவல் துறையினர் விடுத்துள்ள அறிக்கையில், சன்சாத் மார்க் பகுதியில் பெரும் அளவில் மக்கள் கூட்டம் கூடும் என்பதால், பட்டேல் சவுக் முதல் சன்சாத் மார்க்-ஜெய் சிங் சாலை பகுதி வரை இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்த பேரணி நடைபெறும் என்றும், பிரதமர் நரேந்திர மோடி இதில் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனையடுத்து, பேரணி நடைபெறும் பகுதிகளில் இன்று மதியம் 2.30 மணி முதல் மாலை 5 மணி வரை சாலைகள் மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.