டி டி எப் வாசன் (ttf vasan) மீது தனியார் யூடியூப் சேனல் செய்தியாளரை தரக்குறைவாக பேசியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக காரமடை காவல் நிலையத்தில் இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள வெள்ளையங்காடு வாட்டர் போர்டு பகுதியை சேர்ந்த டிடிஎஃப் வாசன் (ttf vasan) விலை உயர்ந்த பைக்கை கொண்டு சாகசங்கள் செய்து அதனை வீடியோவாக பதிவிட்டு 2கே கிட்ஸ் மத்தியில் பிரபலமடைந்தவர். மேலும், டிடிஎப் வாசன் என்ற வைகுண்ட வாசன் “Twin throttlers” என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார்.
இவருக்கு 20 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்ஸ்கள் இருக்கும் நிலையில், கடந்த ஜூலை மாதம் தன்னுடைய பிறந்த நாளை கோவை தனியார் விடுதியில் ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் சேர்ந்து கொண்டாடினார். அங்கு கூடிய கூட்டத்தைக் கண்டு பொதுமக்கள் மிரண்டு போய் இணையத்தில் சரமாரியாக டிடிஎஃப் வாசன் மீது கடுமையான விமர்சனங்களை தெரிவித்தனர்.
இந்நிலையில், பைக் ஸ்டண்டுகள், நெடுஞ்சாலையில் அதிவேகமாக பைக் ஓட்டுவது என இளைஞர்களுக்கு தவறான ஒரு முன்னுதாரணமாக இருப்பதாக சென்னை காவல் துறையில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து டிடிஎஃப் வாசன் இதுகுறித்து, வீடியோ ஒன்றை வெளியிட்டு தான் பயிற்சி எடுத்துக் கொண்டே இத்தகைய ஸ்டண்டுகளில் ஈடுபடுவதாகவும், அதிவேகமாக பைக் ஓட்டியதாக சொல்லப்படும் வீடியோக்கள் ஜமுனா ஹைவே சாலையில் எடுக்கப்பட்டதாகவும் விளக்கம் அளித்தார்.
இதனால், அந்த பிரச்சனை அப்போது முடிவுக்கு வந்ததாக நினைத்திருந்த நிலையில், மீண்டும் ஒரு சர்ச்சையில் தற்போது சிக்கியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த பிரபல யுடியூபர் ஜி பி முத்துவை சந்தித்த டிடிஎப் வாசன் அவரை பைக்கில் அமர வைத்துக்கொண்டு வாகன நெருக்கடி நிறைந்த சாலையில் 150 கிலோமீட்டர் மேலான வேகத்தில் சென்றார். இது தொடர்பாக சூலூர் போத்தனூர் காவல் நிலையங்களில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபோல தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் டிடிஎஃப் வாசன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், தற்போது பிரபல தனியார் யூடியூப் சேனலான இந்தியா கிளிட்ஸ் செய்தியாளர் ஐயப்பன் ராமசாமி என்பவரை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக யூடியூப் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ’45 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கி விட்டு திரியிறவனை எல்லாம் விட்ருவாங்க. அந்த நாய்க்கு மரியாதையே கிடையாது. வெறியோட வெயிட் பண்றேன். கையில சிக்குனா மூஞ்சி முகரை எல்லாம் உடைப்பேன்’ என மிரட்டல் விடுக்கும் வகையில் பேசி இருப்பதாக காரமடை காவல் நிலைய உதவி ஆய்வாளர் விஜயராஜ் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில், டிடிஎப் வாசன் மீது இரண்டு பிரிவுகளில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.