புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னையில் பிப்ரவரி 11ஆம் தேதி அனைத்து கட்சிகளையும் அழைத்து கோரிக்கை மாநாடு நடத்த உள்ளோம்.. சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் ஆட்சியர் அலுவலகத்தில் பிரெடெரிக் எங்கெல்ஸ் (Frederick Engels) பேட்டி..
சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரெடெரிக் எங்கெல்ஸ் (Frederick Engels) ஆட்சியர் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்…
அப்போது பேசிய அவர்,
தமிழகத்தில் 2003 முதல் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்பது நடைமுறையில் இருந்து வருகிறது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என சி பி எஸ் ஒழிப்பு இயக்கம் இரண்டு ஆண்டுகளாக 40-க்கும் மேற்பட்ட போராட்டங்களை நடத்தி உள்ளோம். இந்த நிலையில், வரும் பிப்ரவரி மாதம் 11-ம் தேதி சென்னை அண்ணா அரங்கத்தில் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளை அழைத்து கோரிக்கை மனுவையும் மாநாட்டையும் நடத்த உள்ளோம்.
ராஜஸ்தான்,சத்தீஸ்கர் ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து உள்ளார்கள். அதேபோல், பிற மாநிலங்களில் தேர்தல் நேரத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வோம் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்துவிட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக அதை நிறைவேற்றி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து உள்ளார்கள்.
தமிழ்நாட்டில் 2016 சட்டமன்ற தேர்தலிலும், 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் வாக்குறுதி கொடுத்து அதை நிறைவேற்றவில்லை. மேலும், நடந்து முடிந்த 2021 சட்டமன்ற தேர்தலிலும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியின் போது தேர்தல் அறிக்கையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என அறிவித்திருந்தார்.
தற்போது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து 20 மாதங்கள் ஆகியும் எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை. தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்களை இது மிகப் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தால் தமிழக அரசுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. அரசு அதை தற்போது வரை பொருட்படுத்தாமல் உள்ளது.
தமிழக நிதி அமைச்சர் அரசு ஊழியர்களையும் ஆசிரியர் சங்கத்தையும் தற்போது வரை அழைத்து பேசவில்லை, பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் நிதி அமைச்சர் எடுக்காமல் உள்ளார்.
எந்த ஒரு உறுதிமொழியையும் தமிழக அரசு கொடுக்காமல் உள்ளது. இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு நிலைமையும்,ஜார்க்கண்ட் சத்தீஸ்கர்,பஞ்சாப் இமாச்சல பிரதேசத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து உள்ளார்கள்.
தமிழகத்தில் வாக்குறுதி கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. இதனால், பிப்ரவரி மாதம் 11-ம் தேதி கோரிக்கை மாநாடு நடத்த உள்ளோம். இதில், பங்கேற்க அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம் என தெரிவித்தார்.