திருவண்ணாமலையில் (tiruvannamalai) புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்லுகின்றனர்.
பெருமாளுக்கு உகந்த புண்ணியம் தரும் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை, மகாளய அமாவாசை என மிக முக்கிய நாளாகப் பார்க்கப்படுகிறது. அதே போல், இந்த மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமியும் மிக அற்புத விரத நாளாகப் பார்க்கப்படுகிறது.
புரட்டாசி பௌர்ணமி (purnima) தினத்தில் காலை வேளையில் சிவ வழிபாடு செய்தால், முற்பிறப்பில் செய்த பாவங்கள் நீங்கும்.
நண்பகலில் சிவ வழிபாடு செய்தால், முற்பிறப்பில் செய்த பாவங்கள் மட்டும் இல்லாமல், இந்தப் பிறவியில் செய்த பாவங்களும் நீங்கும்.
மாலை நித்திய பிரதோஷ வேளையில் சிவனை வழிபாடு செய்தால், சிவபெருமானின் அருளால் ஏழேழு பிறவிகளில் செய்து முற்றிய பாவங்கள் அனைத்தும் நீங்குவதுடன், விரும்பிய எல்லா வேண்டுதல்களும் நிறைவேறும் என்பதே புரட்டாசி மாத பௌர்ணமி நாளின் சிறப்பாகும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலையில் உலகப் பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையைச் சுற்றியுள்ள சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
இதனால் திருவண்ணாமலை நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. அதன்படி, புரட்டாசி மாத மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் இன்று அதிகாலை 4.06 மணிக்குத் தொடங்கி நாளை அதிகாலை 3.09 மணி வரை பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் எனக் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு திரளான பக்தர்கள் விடியற்காலை முதல் கிரிவலம் செல்லுகின்றனர். பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் செல்வதற்குத் தேவையான அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் மூலம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும், இந்த நன்னாளில், குலதெய்வ கோவிலுக்குச்சென்று வழிபட்டு வருவது நன்மைகளை வாரி வழங்கும். சந்ததியினர் சிறக்க வாழ்வார்கள்.
குலதெய்வ கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டில் விளக்கேற்றி குலதெய்வ வழிபாடு செய்யலாம். குலதெய்வம் படத்துக்கு மாலையிட்டு அல்லது பூக்களால் அலங்கரித்து, சர்க்கரைப் பொங்கல் அல்லது வெண் பொங்கல் முதலான குலதெய்வத்துக்குப் படையலிடும் உணவை நைவேத்தியமாகச் செய்து, வேண்டிக்கொள்ளலாம்.