நாடாளுமன்றத் தேர்தலை யொட்டி பொதுமக்களுக்கு பணமாகவோ பொருளாகவோ ஏதேனும் பரிசு (Income Tax) வழங்கினால் வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கலாம் என வருமானவரி துறையின் புலனாய்வு பிரிவு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் திருவிழா களைகட்டத் தொடங்கி இருக்கிறது. அரசியல் கட்சிகளும் தங்களின் கூட்டணியை இறுதி செய்து தொகுதிப் பங்கீடுகளை முடித்து வேட்பாளர்களை அறிவித்தும் வருகின்றன.
தமிழகத்தில் தற்போதுவரை அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் ஒரு சிலர் ஏற்கனவே எம்.பியாக இருந்து மீண்டும் களம் இறங்குகின்றனர். கட்சி ரீதியாக அறிமுகமானவர்களும் தேர்தல் களத்தில் புதுமுகங்களாக இறக்கப்படுகின்றனர்.
ஒருசில கட்சிகளில் தாங்கள்தான் வேட்பாளர்கள் என்று மனக்கணக்கு போட்டுக் கொண்டு கட்சி அறிவிக்கும் முன்பே சமூக ஊடகங்கள் வழியாக மக்களிடம் வாக்குகளை சேகரிக்கத் தொடங்கி இருக்கின்றனர்.
மேலும் தேர்தலில் ஓட்டுக்களைப் பெறுவதற்காக வாக்காளர்களை கவரும் முயற்சியாக இப்போதே பரிசுப் பொருட்கள் வழங்கவும் முதற்கட்ட பணப்பட்டுவாடாவுக்கும் அரசியல் கட்சியினர் தயாராகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலை யொட்டி பொதுமக்களுக்கு பணமோ பரிசு பொருளோ வழங்கினால் உடனடியாக வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காலம் என்று வருமானவரிதுறை புலனாய்வு பிரிவு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்காக நடை பெறவிருக்கும் மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு வருமான வரித்துறையால் 24X7 செயல்படும் வகையில் பிரத்யேக கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு தனி நபரோ அல்லது கட்சியோ, நேரடியாகவோ மறைமுகமாகவோ பணம் அல்லது இலவச பொருட்களை விநியோகிப்பது பற்றிய தகவல்கள் பொதுமக்கள் தகவல்களை தெரிவிக்க விரும்பினால் வருமான வரி அலுவலகத்தில் உள்ள கட்டணம் இல்லா தொலைபேசி எண் 1800 425 6669க்கு தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் tn.electioncomplaints2024@incometax.gov.in என்னும் மின்னஞ்சல் முகவரியிலும்,
94453 94453 என்னும் வாட்ஸ் அப் எண்ணுக்கும் தெரிவிக்கலாம் என்றும் வருமானவரித்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தகவல்களை பகிர்ந்து கொள்பவர்களின் பெயர்கள் மற்றும் விவரங்கள் (Income Tax) ரகசியாமாக வைக்கப்படும் என்றும் வருமானவரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.