திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் கடந்த 17,18ம் தேதிகளில் அதிகனமழை பெய்தது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத அளவில் கனமழை கொட்டித் தீர்த்தது.
தென் மாவட்டங்களில் பெய்த அதி கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், திருநெல்வேலி, தூத்துக்குடி நகர், கிராமப்புறங்களில் மழை வெள்ள நீர் புகுந்தது.
தற்போது, மழை ஓய்ந்த நிலையில் வெள்ளநீர் வடிந்து வருகிறது. இருப்பினும் பல பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை வெள்ளம் காரணமாக சாலைகளில் தேங்கிய மழைநீர், மற்றும் அடித்துச் சென்ற வெள்ளம் காரணமாக தரைப்பாலங்கள், ரெயில் தண்டவாளங்கள் சேதமடைந்ததால் பேருந்து, ரயில் போக்குவரத்தும் முற்றிலும் முடங்கியது. தற்போது சேதமடைந்த தரைப்பாலங்கள் சரி செய்யப்பட்டு போக்குவரத்து சேவைகள் தொடங்கி உள்ளன.
இதனிடையே, மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏரல் வட்டாட்சியர் கைலாச குமாரசாமி வெள்ள நிவாரண பணிகளை முறையாக செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை அடுத்து ஏரல் வட்டாட்சியர் கைலாச குமாரசாமியை பணியிடமாற்றம் செய்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அதிரடி உத்தரவிட்டுள்ளார். மேலும், ஏரலுக்கு புதிய வட்டாட்சியராக கோபாலகிருஷ்ணனை நியமித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.