தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் நன்மை அடைந்து வருகின்றனர்.
தமிழக அரசு இதனிடையே, கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் பொது விநியோகத்திட்ட நியாயவிலை கடைகளில் காலியாக உள்ள இடங்களுக்கு அவ்வப்போது பணியிடங்களுக்கான அறிவிப்பும் வெளியாகி கொண்டிருக்கிறது..
இந்நிலையில் திமுக அரசின் முதல் முழுமையான பட்ஜெட், சட்டப்பேரவையில், கடந்த 18ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.. நிதித் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், 2022 – 2023 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதையடுத்து, இன்று முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்தில் நியாய விலைக் கடையை எண்ணிக்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று திருப்பூர் தெற்கு உறுப்பினர் செல்வராஜ் கேள்வி எழுப்பினார்… அதற்கு பதிலளித்த கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது, “திருப்பூரில் நியாய விலைக் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
1,000 அட்டை உள்ள நியாய விலைக் கடைகளை பிரிப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும். மேலும், 150 ரேசன் அட்டைகளுக்குப் பகுதி நேர கடைகளும், 200 ரேசன் அட்டைகளுக்கு மேல் இருந்தால் முழு நேரக் கடைகளும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
3 முழு நேர கடைகள், 7 பகுதி நேர கடைகள் திமுக ஆட்சிக்கு வந்த உடனேயே திருப்பூரில் தொடங்கப்பட்டுள்ளது… நிதி நெருக்கடி இருப்பினும் தேவைப்படும் இடங்களில் மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் நியாயவிலைக் கடைகள் திறக்கப்படும்” என்று ஐ.பெரியசாமி பதில் அளித்தார்.