கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் அருகே உள்ள முண்டத்திக்கோடு பகுதியில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட பெரும் வெடி விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் .
மேலும் இந்த விபத்தில் சுமார் 40 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் கேரளா முழுவதும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
வரும் 26-ம் தேதி உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் விழா நடைபெற உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.
இதன் ஒரு பகுதியாக முண்டத்திக்கோடு பகுதியில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலத்தில் பட்டாசு தயாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் அருகிலேயே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கிடங்கில் சேமிக்கப்பட்டிருந்தன.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் சுமார் 3.30 மணியளவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து கிடங்கில் இருந்த பட்டாசுகள் ஒன்றன்பின் ஒன்றாக வெடித்ததால் நிலைமை கட்டுப்பாட்டுக்கு வராமல் தாமதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் திருச்சூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு நிவாரண உதவிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதேபோல், கேரள முதல்வர் பினராயி விஜயன் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டு, சிகிச்சை பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
