கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அங்கு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கோப்புகளை ஆய்வு செய்து குளறுபடி செய்திருந்த விடுதி காப்பாளரை பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் பங்கேற்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இதற்காக நேற்றைய தினமே கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தந்திருந்தார்.
இதன் போது கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு சென்று விளையாட்டு மாணவர்களுக்கான தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மாணவர் விடுதியில் பயிலும் மாணவர்களிடம் கலந்துரையாடினார்.
இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி காட்டி நாயனப்பள்ளியில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிடர் நல தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் விடுதியை திடீர் ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு, குடிநீர் உள்ளிட்ட, அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார்.
மேலும் அங்கு இருப்பு வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்கள் மற்றும் கோப்புகளை ஆய்வு செய்தார். அப்போது, கோப்புகளில் பல்வேறு குளறுபடிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், விடுதி காப்பாளர் முருகனை உடனடியாக பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
அரசுத்துறை சேவைகளை மேம்படுத்த திடீர் ஆய்வுகள் கைகொடுப்பதாக அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.