தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய வாயுக் கசிவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து அவர்களுடைய நலம் பற்றி விசாரித்துள்ளார்.
எண்ணூர் பெரியகுப்பம் அருகே இயங்கி வரும் தனியார் உரத் தொழிற்சாலைக்கு தேவையான ரசாயனங்கள் கப்பல் மூலம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று இரவு அமோனியா வாயு ஏற்றி வந்த கப்பல் நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டு, அதிலிருந்து குழாய் மூலம் அமோனியம் வாயு ஆலைக்குள் கொண்டு வரும் பணி நடைபெற்ற போது நள்ளிரவு 12 மணியளவில் திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டது.
இதன் காரணமாக இந்த தொழிற்சாலைக்கு அருகே உள்ள பெரியக்குப்பம், சின்னக்குப்பம், நேதாஜி நகர் உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு வாந்தி, கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

இதனால் குழந்தைகள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், அமோனியா வாயு கசிவினால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து அவர்களுடைய நலம் பற்றி விசாரித்துள்ளார்.