நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டின் வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க மாட்டோம் என பேசியுள்ளார். இப்படி கூறுவது, நிதியமைச்சருக்கான அதிகாரமா? என விடுதலை சிறுத்தைகள் தலைவரும் எம்.பி.யுமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையின் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பெய்த கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் பெரிய பாதிப்புகளை சந்தித்துள்ளோம். இதனை சரி செய்ய சிறப்பு பேரிடர் நிவாரண நிதி கோரி முதலமைச்சர் அவர்கள் பிரதமரிடம் நேரில் சந்தித்து நிவாரண நிதி கோரி கோரிக்கை வைத்தார். ஆனால், வழக்கமாக கொடுக்கும் நிதியை மட்டும் மத்திய அரசு இரு தவணையாக ரூ.900 கோடியை கொடுத்துள்ளது.
இந்த நிதி என்பது ஏற்கனவே கொடுப்பதாக கூறிய நிதியே தவிர, பேரிடர் சிறப்பு நிதி அல்ல. இது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை அவமதிக்கும் செயல். ஈவு இரக்கமற்ற அணுகுமுறையாக உள்ளது. பேரிடர் காலத்தில் மக்கள் மறுவாழ்வை உறுதிப்படுத்த மத்திய அரசுக்கும் பொறுப்பு உள்ளது. ஆனால், அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் மாநில அரசே பொறுப்பு என மத்திய அரசு இருக்கிறது.
நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டின் வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க மாட்டோம் என பேசியுள்ளார். இப்படி கூறுவது, நிதியமைச்சருக்கான அதிகாரமா? என்ற கேள்வி எழுகிறது. நிர்மலா சீதாராமன் தன்னை தானே பிரதமராக எண்ணிக்கொண்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
திமுகவிற்கு எதிராக பேசுவதாக நினைத்து கொண்டு தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு எதிராக பேசியுள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்க ஒரு விஷயம். பிரதமரிடம் வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் பேச நேரம் கேட்டு சென்று எடுத்துரைத்துள்ளார். ஆனால், இந்தியா கூட்டணியில் பங்கேற்க சென்றுள்ளார் என அதனை அரசியலாக்குகின்றனர்.
நாடாளுமன்றத்தில், ஜனநாயகத்தில் பாதுகாப்பு இல்லை. தமிழ்நாட்டு மக்களை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது மத்திய அரசு. மத்திய அரசு பேரிடரை பேரிடராக பார்க்காதது அரசியல் காழ்ப்புணர்ச்சி செயல். தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் வெள்ள பாதிப்புகளை சரி செய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொத்து கொத்தாக உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்கிறது. உள் நோக்கத்தோடு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. நாடாளுமன்ற அரசியல் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவு மோசமான நிகழ்வு நடந்துள்ளது. 2024 தேர்தலில் பொதுமக்கள் பாஜகவை தூக்கி எறிவதே ஒரே தீர்வு என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.