ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் செப்டம்பர் 8ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் திருவிழாக்களில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கபட்ட நிலையில். கொரோனா பாதிப்பு சற்று குறைந்து நிலைமை கட்டுக்குள் உள்ளதை அடுத்து இந்த ஆண்டு திருவிழாக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஓணம் திருவிழா செப்டம்பர் 8ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கேரளாவில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழாவான ஓணம் பண்டிகை, சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மலையாள மக்களாலும் கொண்டாடப்படும் பண்டிகை. கேரளாவின் அறுவடை திருநாள் என்று அழைக்கப்படும் இந்த பண்டிகை இந்தாண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 8-ம் தேதி வரை கொண்டாடப்பட இருக்கிறது.
இந்த நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் செப்டம்பர் 8ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஓணம் பண்டிகையை முன்னிட்டு, செப்டம்பர் 8-ம் தேதி சென்னை மாவட்டத்திற்கு அரசு ஆணைப்படி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேற்படி உள்ளூர் விடுமுறைக்கு பதில் 17.09.2022 சனிக்கிழமை அன்று சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணிநாளாக அறிவிக்கப்படுகின்றது.
உள்ளூர் விடுமுறை நாளான 08.09.2022 அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் குறிப்பிட்ட பணியாளர்களைக் கொண்டு பொது மக்களுக்கு சிரமம் ஏற்படாதவாறு செயல்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.