3 நாள் பயணமாக தமிழகத்துக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி(PM modi), சென்னையில் கேலோ இந்தியா போட்டிகளை நாளை தொடங்கி வைக்கிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் வரும் 19-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெறவுள்ள இதன் தொடக்க விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கவுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பெங்களூருவில் இருந்து விமானத்தில் புறப்படும் பிரதமர் மோடி, (PM modi) நாளை மாலை 4.50 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார்.
அங்கு அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம், ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்துக்கு 5.20 மணிக்கு வரும் பிரதமர் பின்னர், நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு காரில் வருகிறார்.
பிரதமருக்கு வழிநெடுகிலும் தமிழக பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், ஆளுநர்ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
கேலோ இந்தியா தொடக்க விழாவில் கலந்து கொண்ட பின் இரவு 7.45 மணிக்கு ஆளுநர் மாளிகை வருகை தரும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
பின்னர் தமிழக பாஜக நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசவுள்ளார். பின்னர் ஆளுநர் மாளிகையில் இரவு ஓய்வு எடுத்த பின் பிரதமர், மறுநாள் காலை விமானத்தில் திருச்சி செல்கிறார்.
பின்னர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் 10.55 மணி அளவில் தரிசனம் செய்வதுடன், அங்கு நடைபெறும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.
இதனைத் தொடர்ந்து, காரில் ஹெலிகாப்டர் தளத்துக்கு செல்லும் பிரதமர், மதியம் 2.05 மணிக்கு ராமேசுவரம் செல்கிறார்.
2.10 மணிக்கு ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் தரிசனம் செய்கிறார். அங்கு நடைபெறும் பல்வேறு வழிபாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
இதையும் படியுங்க : https://itamiltv.com/ayodhya-truck-carrying-fireworks-catches-fire-in-uttar-pradesh/
ஸ்ரீராமகிருஷ்ணர் மடத்தில் இரவு தங்கி மறுநாள் காலை, ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பின் ராமநாத சுவாமி கோயிலில் நடைபெறும் பூஜைகளில் பங்கேற்கிறார்.
பின்னர், காலை 10.05 மணிக்கு சாலை மார்க்கமாக தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு சென்று அங்குள்ள கோதண்டராமர் கோயிலில் நடைபெறும் வழிபாடுகளில் பங்கேற்கிறார்.
பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையம் சென்று, அங்கிருந்து டெல்லி செல்கிறார்.
பிரதமர் வருகையை முன்னிட்டு, சென்னை, திருச்சி, உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.