சென்னையில் மின்சார ரயிலில் பெண் ஒருவரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சட்டம்-ஒழுங்கு காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த கபிலா என்பவர் பெருங்களத்தூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில், வழக்கம் போல் கடந்த 14-ஆம் தேதி கிண்டியில் இருந்து தாம்பரம் செல்லும் மின்சார ரயிலில் முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்தப் பெட்டியில் பயணம் செய்த ஆண் ஒருவர் திடீரென ஆபாசமாக நடந்துகொண்டுள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண், தனது செல்போனில் அவரது செயலை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு அவரிடம் சண்டையிட்டுள்ளார். ஒருக்கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், நான் போலீஸ் எனக்கூறி மிரட்டல் விடுத்த அந்த நபர், உன்னால் எதுவும் செய்யமுடியாது என கூறி விட்டு ரயிலில் இருந்து சென்றுள்ளார்.
இதனை அடுத்து தாம்பரம் ரயில் நிலையத்தில் இறங்கியதும் ரயில்வே காவலர்களிடம் தனக்கு நடந்த கொடுமைகளை கூறி புகார் அளித்த அந்தப் பெண் தான் பதிவு செய்த வீடியோக்களையும் சமர்ப்பித்துள்ளார்.
இந்த புகாரின் பேரின் விசாரணை மேற்கொண்ட ரயில்வே போலீசார் சிசிடிவி ஆதாரங்கள் மற்றும் வீடியோக்களை சரி பார்த்ததில் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் தாம்பரம் காவல் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு காவலராக பணிபுரிந்து வரும் கருணாகரன் என்பதை உறுதி செய்தனர்.
பின்னர் அவர் மீது வழக்குப் பதிவு செய்த ரயில்வே போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவலரே பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.