மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களுக்கு நிவாரணத் தொகை குறித்து மூன்று நாட்களில் அறிவிக்கப்படும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.
தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வருகிற 22-ந் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பாக தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
அதன்படியே நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முதலே கனமழை பெய்து வருகிறது. வெளுத்து வாங்கும் மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொது மக்கள் கடும் சிரமங்களை எதிர் கொண்டு வருகிறனர்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்து வருகிறது. மேலும் நாளையும் கனமழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.
இந்த நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் மழைநீர் புகுந்துள்ள பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார்.
அங்கு தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றவும், கடைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சரி செய்யவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு அதிகாரிகளுக்கு உத்தவிட்டார்.
மேலும் திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை காரணமாக தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் முழு வீச்சில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை வண்ணாரப்பேட்டை மணிமூர்த்தி நகர் மக்கள், தச்சநல்லூரில் இருக்கும் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை சந்தித்து அரிசி, போர்வை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
மேலும், முழுதாக இயல்புநிலை திரும்பும் வரை களத்தில் மக்களுக்கான உதவிகளை செய்வோம் என்றும் கூறினார்.
இந்த நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களுக்கு நிவாரணத் தொகை குறித்து 3 நாட்களில் அறிவிக்கப்படும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.