எண்ணூர் முகத்துவாரப் பகுதியில், வெள்ள நீரோடு கலந்த எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் முதல் வாரத்தில் கடும் காற்றுடன் கனமழை கொண்டித் தீர்த்தது.
இந்த மழையின் காரணமாக சென்னையில் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. குறிப்பாக எண்ணூர் முகத்துவாரப் பகுதியில், சென்னை பெட்ரோ கெமிக்கல் நிறுவன வளாகத்திலிருந்து வெள்ள நீரோடு கலந்து வெளிவந்த எண்ணெய் கசிவினால் மீனவ மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து எண்ணெய் கசிவினை அகற்றிட தமிழ்நாடு அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இந்த நிலையில் எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 8 கோடியே 68 இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிட முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:
“கொசஸ்தலை ஆற்றில் எண்ணூர் முகத்துவார பகுதியில் கடந்த 05.12.2023 அன்று ஏற்பட்ட எண்ணெய் கசிவினை அகற்றிட தமிழ்நாடு அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்நிகழ்வில் காட்டுக்குப்பம், சிவன்படைகுப்பம், எண்ணூர் குப்பம், முகத்துவாரகுப்பம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், வ.உ.சி நகர், உலகநாதபுரம் மற்றும் சத்தியவாணி முத்து நகர் ஆகிய கடலோர மீனவ கிராமங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடிவலைகளில் எண்ணெய் படிந்து சேதம் ஏற்பட்டது.
மேலும் இக்கிராமங்களை சார்ந்த மீனவர்கள் எண்ணெய் கசிவினால் மீன்பிடித் தொழிலுக்கு செல்ல இயலாததால் அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது. இதைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சர் மு.கஸ்டாலின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் 6 ஆயிரம் ரூபாய் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கூடுதலாக எண்ணெய் கசிவினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மேற்கண்ட மீனவ கிராமங்களை சார்ந்த 2,301 குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக தலா ரூ.12,500 வீதமும், மேலும் எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட 787 மீன்பிடி படகுகளை சரிசெய்திட படகு ஒன்றிற்கு தலா ரூ.10,000 வீதமும் மொத்தம் 3 கோடி ரூபாய் அரசினால் ஒப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்நிவாரணத் தொகை பாதிக்கப்பட்ட மீனவர்களின் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டு வருகிறது.
மேலும் சென்னை மாநகராட்சி மண்டலம் 1 வார்டு 4, 6, மற்றும் 7 ஆகிய பகுதிகளில் எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட 6,700 குடும்பங்களுக்கு தலா ரூ.7,500 வீதம் மொத்தம் 5 கோடியே 2 இலட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கிட முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிவாரணத் தொகையினை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
எனவே, மிக்ஜாம் புயல் கனமழையினால் ஏற்பட்ட எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட 9,001 குடும்பங்களுக்கு 8 கோடியே 68 இலட்சம் ரூபாய் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்கள்” இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.