நடிகரும் தேமுதிக தலைவருமான விஜய்காந்த் மறைவையொட்டி நாளை தமிழகம் முழுவதும் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் நேற்று முன்தினம் இரவு மீண்டும் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
விஜயகாந்த் மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜய்காந்த் மறைவையொட்டி நாளை தமிழகம் முழுவதும் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு பாதை அமைத்து அதில் அனைவரையும் ஒருங்கிணைத்தவர். திரைப்பட தயாரிப்பாளர்களை “முதலாளி” என அன்போடு அழைத்தவர்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்களான கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரிடம் அன்பு பாராட்டியவர். தமிழ் திரை உலகின் நலனுக்காக உழைத்தவர். தன்னுடன் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களுக்கும் தனது ஒவ்வொரு பிறந்த நாளிலும் நலத்திட்டங்கள் வழங்கி மகிழ்ந்தவர்.

அவரது மறைவு பேரிழப்பாகும். அவரது குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் சங்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். மனிதநேய மிக்க கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை படப்பிடிப்புகள் அனைத்தையும் ரத்து செய்து அவரது இறுதி பயணத்தில் பங்கேற்போம்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.