டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு வரும் இளம் கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில் நாளை நடைபெற உள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக் கோப்பை லீக் போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 8 ஆம் தேதி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க வீரரான ஷுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது .
கடுமையான காய்ச்சலால் அவதிபட்டு வரும் ஷுப்மன் கில்லுக்கு பல விதமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் . இதனால் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சில ஆட்டங்களில் அவர் விளையாடுவது சந்தேகம் தான் என கிரிக்கெட் வட்டாரங்களில் கூறப்பட்டது .
இந்நிலையில் தற்போது ஷுப்மன் கில் உடல்நிலை குறித்து பிசிசிஐ நிர்வாகம் அண்மை தகவலை வெளியிட்டுள்ளது :
இளம் கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில் புதன்கிழமை ( நாளை ) நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், இவரை இந்திய அணியுடன் டெல்லிக்கு அனுப்பாமல் சென்னையில் தங்கி மருத்துவக் குழுவின் தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளதாகவும் பிசிசிஐ அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது .
இந்த வருடம் ஐ.பி.எல் மற்றும் இந்திய அணிக்காக களமிறங்கி பல போட்டிகளில் சிறப்பாக விளையாடி சதம் விளாசிய ஷுப்மன் கில் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்காக விளையாட முடியாமல் டெங்குவால் அவதிப்பட்டு வருவது சற்று வருத்தம் தான்.
இருப்பினும் அவர் பூரண நலம் பெற்று அணிக்கு விரைவில் திரும்ப வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் பிராத்தனை செய்து வருகின்றனர்.