இன்றைய நவீன வாழ்வியலில் அச்சுறுத்தும் பல நோய்களுக்கு முக்கிய காரணம் உணவு முறைகள் தான். பாரம்பரியமாக பழகி வந்த இயற்கை விவசாயத்தை மறந்து போன காரணத்தால் நாம் சமாளிக்கபோகும் நோய்நிலைகளை பட்டியலிட்டால் நிச்சயம் பலருக்கு தூக்கமே தொலைந்து போய்விடும்.
அதனால் ஏற்படும் நோய்கள் ஒருபுறமிருக்க, அதனால் உண்டாகும் உறுப்பு பாதிப்பு என்பது ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய சவால். அந்த வகையில் நம் உடலில் பெரும்பாலும் பாதிக்கப்படும் முக்கிய உறுப்பு ‘சிறுநீரகம்’ தான்.
ஏனெனில், பெரும்பாலான மருந்துகளும், நம் உணவிற்காக விவசாயத்தில் பயன்படுத்தும் செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள் நாம் உண்ணும் உணவில் கலந்திருப்பதும், அதனால் விளையும் உணவில் இயற்கையாகவே கலந்துள்ள ஈயம், பாதரசம் மற்றும் காட்மியம் போன்ற உலோகங்களும், நம் சிறுநீரகத்தின் செயல்பாட்டை குறைத்து உடல்நலக் குறைவை ஏற்படுத்துவது அதிர்ச்சியான ஒன்று.
நாள்பட்டு குறையாத சர்க்கரை அளவை குறைக்க போராடி வரும் தருணத்தில் திடீரென சிறுநீரக செயலிழப்பும், கைகோர்த்து ஒன்றிணையும் போது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை திக்குமுக்காட வைக்கும். ‘டாக்டர் எனக்கு சர்க்கரை அளவு குறையவே மாட்டேங்குது, ரத்த பரிசோதனை மட்டும் போதுமா, அல்லது சிறுநீர் பரிசோதனையும் அவசியமா?’ என்று மருத்துவரிடம் கேட்க நினைக்கும் பலருக்கு சிறுநீர் பரிசோதனை அவசியம் என்பதே பதில். அதில் முக்கியமாக மைக்ரோ-அல்புமின் அளவு அல்லது அல்புமின் அளவை சோதிப்பது அவசியம்.
சர்க்கரை நோயை தொடர்ந்து சிறுநீரகநோயும் வருவதால், கால் வீக்கமும், அதிகரித்த ரத்த அழுத்தமும், குறைந்த உடல் எடையும், வாந்தியும், பசியின்மையும், தசை வலியும், உடல் வலியும் ஒன்று சேர்ந்து இது உடலை வருத்தும். “வரும் முன் காப்போம்” என்று நம் முன்னோர்கள் வாய்மொழியாய் கூறிய வாழ்வியல் புதையல்கள், கண் கெட்ட பிறகு சூரிய வணக்கத்தை போல தோன்றும்.
மாற்றுமருத்துவமாய் மாறிப்போன முதன்மை மரபு மருத்துவம் நினைவுக்கு வரும். இவ்வாறு சிறுநீரக நலத்தை தேடுபவர்களுக்கு அமிர்தமாய் சித்த மருத்துவம் கூறும் அதிசய மூலிகை தான் ‘கருப்பு விதை’ எனப்படும் ‘கருஞ்சீரகம்’.
பார்ப்பதற்கு சீரகத்தை ஒத்த உருவமும், கருப்பு நிறமும் கொண்ட நாம் பயன்படுத்த மறந்த அஞ்சறைப்பெட்டி கடைசரக்கு இந்த கருஞ்சீரகம். உலகின் பல்வேறு நாடுகளில் பல்வேறு பாரம்பரிய மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்பட்ட சிறப்பான மூலிகை கருஞ்சீரகம்.
இந்த “கருப்பு விதை, மரணத்தைத் தவிர அனைத்து நோய்களையும் குணப்படுத்தும்” என்கிறார் முகம்மது நபிகள். ‘நோய் தீர்க்கும் கருஞ்சீரகம்’ என்று பைபிள்-இல் கூட குறிப்பிடப்பட்டிருக்கிறது.
கருஞ்சீரக விதைகளில் நார்ச்சத்து, அமினோ அமிலங்கள், சபோனின் ஆகிய வேதிப்பொருள்களுடன், உடல் இயக்கத்திற்கு தேவையான இரும்பு, சோடியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய தாதுஉப்புக்களும் மற்றும் “லினோலெனிக் அமிலம்” மற்றும் “ஒலியிக் அமிலம்” போன்ற கொழுப்பு அமிலங்களும், விட்டமின்கள் எ, சி, ஈ, கே ஆகியவையும் இயற்கையாகவே கலந்துள்ளது.
இதன் விதைகள் கறுப்பு நிறமாக இருக்க காரணம் இதில் உள்ள ‘மெலட்டின்’ என்ற வேதிப்பொருள்தான். இதன் மருத்துவ குணத்திற்கு முக்கிய காரணம் இதன் விதைகளில் உள்ள ‘தைமோகுயினோன்’ என்ற வேதிப்பொருள் தான். இந்த வேதிப்பொருளை மையமாக வைத்து உலக அளவில் பல ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
பெண்களுக்கு மாதவிடாயை சீராக்கும் தன்மையும், பிரசவத்திற்கு பின் பால்சுரப்பினை அதிகரிக்கும் தன்மையும் இதற்குண்டு.ஆஸ்துமா, தோல் வியாதிகள், மூட்டு வியாதிகள், இவற்றுக்கும் நல்ல பலனை தரக்கூடியது. அதனால் தான் என்னவோ ‘அதிசய மூலிகை’ என்ற பெயரும் இதற்குண்டு.
இத்தகைய கருஞ்சீரகத்தை பொடித்து சூரணமாகவோ, அல்லது இதனைக்கொண்டு தயாரிக்கப்படும் தைலமாகவோ இதனைப் பயன்படுத்த இதன் மருத்துவக்குணங்களை பெற முடியும். சரும பாதுகாப்பிற்கும், அழகிற்காகவும் கருஞ்சீரக தைலம் உலக அளவில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆகவே, கருஞ்சீரகத்தை அழகிற்காக மட்டுமில்லாமல் ஆரோக்கியத்திற்காகவும் அஞ்சறைப்பெட்டியில் சேர்த்து பயன்படுத்த நலம் நம்மை நாடி வரும்.