தமிழ் நாட்டில் இன்று ரேஷன் கடைகளுக்கு (ration shops) பணி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு ஈடாக வரும் 16 ஆம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ் நாட்டில், 2023 தைப் பொங்கல் பண்டிகையை பொது மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடும் வகையில், அரசு சார்பில் நியாய விலைக் கடைகள் மூலம், தகுதி வாய்ந்த அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் எனவும், மேலும், அதனுடன், ரொக்கப் பணமும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழுக் கரும்பு ஆகியவற்றுடன், 1,000 ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதனையடுத்து, சென்னையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் பரிசுத் தொகை வழங்கும் திட்டத்தை கடந்த 9 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் அப்போது, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இலவச வேட்டி – சேலையும் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் இந்தத் திட்டத்தை அந்தந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் பெறாதவர்கள், 16 ஆம் தேதிக்குப் பின்னர் ரேஷன் கடைகளுக்குச் சென்று பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இரண்டாவது வெள்ளிக் கிழமையான இன்று பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது காரணமாக ரேஷன் கடைகளுக்கு (ration shops) பணி நாளாக அறிவிக்கப்பட்டதற்கு ஈடாக 16 ஆம் தேதி திங்கட்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், முன்னதாக ஜனவரி 27 ஆம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நிர்வாகக் காரணங்களுக்காக ஜனவரி 16 ஆம் தேதி விடுமுறை நாளாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.