பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் அதிவேகத்தில் பைக் ஓட்டி தற்போது காயத்துடன் புழல் சிறையில் இருக்கும் நிலையில் தற்போது அவர் மேலும் ஒரு புதிய சிக்கலில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
காஞ்சிபுரம் அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தனது விலையுயர்ந்த பைக்கில் அதிவேகமாக சென்று வீலிங் செய்யமுற்பட்டபோது பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது .
இதையடுத்து அதிவேகத்தில் வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த பாலுசெட்டிசத்திரம் போலீசார் நேற்று டிடிஎஃப் வாசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அவரை புழல் சிறையில் அடைத்துள்ளனர் .
இந்நிலையில் தற்போது டிடிஎஃப் வாசன் புதிய சிக்கலில் சிக்கியுள்ளார். விபத்தில் சிக்கிய போது போலீசாரால் கைப்பற்றப்பட்ட தலைக்கவசத்தால் வாசன் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அந்த தலைக்கவசத்தில் ஐ.எஸ்.ஐ தரச்சான்று முத்திரை இல்லை என கூறப்படுகிறது.
டிடிஎஃப் வாசன் பயன்படுத்திய அந்த ஹெல்மெட் வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டதாக கூறப்படும் நிலையில் அவர் மீது மேலும் ஒரு புகார் எழுந்துள்ளது . டிடிஎஃப் வாசன் பயன்படுத்திய அந்த ஹெல்மட்டின் மதிப்பு சுமார் ஒன்றரை லட்ச ரூபாய் வரை இருக்கும் என கூறப்படுகிறது.
ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கியுள்ள வாசனுக்கு ஆசை ஆசையாய் வாங்கிய ஹெல்மெட்டும் தற்போது அவருக்கு எதிராக திரும்பியுள்ளதால் அவருக்கு இது போதாத காலம் என நெட்டிசன்கள் பலர் கருத்து கூறி வருகின்றனர் .