முதுகுளத்தூர் அருகே நாய்கள் கடித்ததில் 20 செம்மறி ஆட்டுக் குட்டிகள் (lambs) உயிரிழந்தன. அதனால், ஆட்டுக்குட்டிகளின் உரிமையாளர்கள் சோகமடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வாகைகுளம் என்ற கிராமத்தில் கால்நடை விவசாயிகளான பால்பாண்டி மற்றும் இருளாண்டி ஆகிய இருவரும் ஊரின் அருகே உள்ள வயல் வெளியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
அவர்கள், எப்போதும் ஆடுகளை (lambs) மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று பின்னர், மாலை நேரத்தில் அந்த கிடையில் அடைத்து வைப்பது வழக்கம். நேற்றும் வழக்கம் போல மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று வந்த பிறகு அவைகளை கிடையில் விட்டு சென்றுள்ளனர்.
இதனையடுத்து, இன்று அதிகாலை அவர்கள் அங்கு வந்து பார்த்தபோது வயல்வெளி பகுதியில் சுமார் 20 ஆட்டுக் குட்டிகள் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளன. அதன் பிறகு இறந்த ஆட்டுக் குட்டிகளை நாய்கள் கூட்டம் கடித்து குதறியது அவர்களுக்கு தெரியவந்துள்ளது.
இந்நிலையில், அதனை கண்டு அதிர்ச்சியில் உறைந்த ஆட்டுக் குட்டிகளின் உரிமையாளர்கள் உடனடியாக இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கும் மற்றும் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பேரூராட்சி நிர்வாகிகள் மற்றும் காவல் துறையினர் ஆட்டுக்குட்டிகள் இறந்து கிடந்த இடத்தில் ஆய்வு நடத்தினர்.
அதன் பின்னர், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், நாய்களால் கடிபட்டு உயிரிழந்த அந்த ஆட்டுக் குட்டிகளின் மதிப்பு சுமார் ஒரு லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்த ஆடுகளை பறிகொடுத்த ஆடுகளின் உரிமையாளர்கள் மிகுந்த சோகத்தில் மூழ்கியுள்ளனர். மேலும், பேரூராட்சி நிர்வாகிகளிடம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.