திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புது நகரை சேர்ந்த 20 வயதாகும் சதீஷ் என்ற இளைஞர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி சி ஏ மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், சதீஷ் பகுதி நேர வேலையாக கேட்டரிங் சர்வீஸ் சென்டர் ஒன்றில் பணிக்கு சென்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி மாணவர் சதீஷ் மீஞ்சூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கேட்டரிங் வேலைக்கு சென்று இருந்தார்.
அப்போது, அங்கு ஒரு பாத்திரத்தில் இருந்த உணவை பரிமாறுவதற்காக சதீஷ் மற்ற தொழிலாளர்களுடன் அதனை தூக்கி சென்றுள்ளார். அந்த நேரத்தில் சதீஷ் பின்னோக்கி பாத்திரத்தை தூக்கிக்கொண்டு நடந்து சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அருகில் இருந்த கொதிக்கும் ரசம் அண்டாவிற்குள் சதீஷ் நிலை தடுமாறி விழுந்துள்ளார். இதனால், உடல் வெந்து அலறி துடித்த அவரை தொழிலாளர்கள் மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சதீஷுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், இது குறித்து மீஞ்சூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமண மண்டபத்தில் கொதிக்கும் ரசம் அண்டாவிற்குள் தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.